ஊழியர்கள் தங்கும் வீட்டில், குடிபோதையில் இருந்த கட்டுமான ஊழியர் ஒருவர் மற்றோர் ஆடவரைத் திட்டி அவரது காதைக் கடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குற்றங்களுக்காக இந்தியாவைச் சேர்ந்த 37 வயது மனோகர் சங்கருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
கடும் காயத்தை ஏற்படுத்தியதாகவும் இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சங்கர், அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள ஊழியர்கள் தங்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் பாதிக்கப்பட்டவருடன் தங்கியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி, சங்கர் அடுக்குமாடிக் கட்டடத்தின் மாடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்டவரும் அதே இடத்தில் இருந்தார்.
சங்கர் திடீரென பாதிக்கப்பட்டவரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் அவரைத் திட்டினார். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை அணுகி அவரது இடது காதைக் கடித்தார்.
பாதிக்கப்பட்டவர் மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை நாடினார்.
கடும் காயத்தை ஏற்படுத்தியதற்காக, சங்கருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட்டிருக்கலாம்.