ஈசூனில் ஞாயிற்றுக்கிழமை காலை காரும் மின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 59 வயது ஆடவர் டேவிட் சோங் உயிரிழந்தார். அவர் போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலர் என்று தெரிவிக்கப்பட்டது.
சோங் தன்னுடைய வாழ்நாளில் 36 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் ஏறத்தாழ பத்துமுறை சிறைக்குச் சென்று திரும்பியவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு’சனா’ எனப்படும் சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பில் தொண்டூழியராக இணைந்தார். போதைப்பொருள் பயன்படுத்திய குற்றவாளிகள் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர அவர் உதவினார்.
தொண்டூழியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்ட அவர், நீக்குப் போக்கான வேலைநேரத்தின் பொருட்டு உணவு விநியோகப் பணியைத் தேர்ந்தெடுத்ததாக சோங்கின் சகோதரர் கூறினார். சனிக்கிழமைதோறும் தவறாது தொண்டூழியத்தில் ஈடுபடுவது சோங்கின் வழக்கம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

