உலகளாவிய பிளாஸ்டிக் மாசுக்குத் தீர்வு காணும் வழிகளில் ஒன்றாக பிளாஸ்டிக் சேகரிப்பு ஊக்கத்தொகை ஐக்கிய நாட்டுப் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றது. ஆனால், அது தொடர்பான விவாதங்கள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.
கரிமம் தொடர்பான ஊக்கத்தொகையை வாங்கி, அதை தங்கள் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை ஈடுகட்ட நிறுவனங்கள் பயன்படுத்துவதைப் போன்றது இந்தத் திட்டம்.
அதுபோல, பிளாஸ்டிக் ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்புத் திட்டங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும். இதனால், பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டமைப்புத் திட்டத்தை மேம்படுத்த முடியும்.
ஜூன் மாதத்தில் 170 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாரிசில் சந்தித்து, பிளாஸ்டிக் மாசுக்கு முடிவு கட்டும் ஐ.நா. உடன்பாடு பற்றி பேசினர். அந்த உடன்பாடு 2024ல் நடப்புக்கு வரும்.
பிளாஸ்டிக்கின் வாழ்க்கை சுழற்சி, பிளாஸ்டிக் பொருள்களின் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு போன்ற விவகாரங்களுக்கு உடன்பாடு தீர்வு காணும்.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுப்புறத்துக்குள் கசிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் தருவாயில் நாடுகள் உள்ளன என்று இந்தப் பேச்சுவார்த்தைகளில் துடிப்பாக பங்கேற்கும் சிங்கப்பூர் கூறியுள்ளது.
“தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைகள் பிளாஸ்டிக் மாசை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் என்பது சிங்கப்பூரின் கருத்தாக உள்ளது,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
நல்ல தரமான, தூய்மையான பிளாஸ்டிக் போத்தல்களும் உலோக டின்களும் சிங்கப்பூரின் மறுசுழற்சி தொழில்துறையை மேம்படுத்த உதவும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த மார்ச்சில் அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பிளாஸ்டிக் விகிதம் 2022 முதல் 6 விழுக்காடாக இருக்கிறது. உலக அளவில், ஆண்டுதோறும் 380 மில்லியன் டன் எடை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 9 விழுக்காடு பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது.


