தோ பாயோவில் டெங்கி சம்பவங்கள் எதிர்பாராத அளவுக்கு கூடியுள்ளது.
மொத்தம் 172 டெங்கி சம்பவங்கள் அவ்வட்டாரத்தில் பதிவாகியுள்ளன. இது கடந்த வாரம் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம்.
தோ பாயோவில் உள்ள பல வீவக புளோக்குகளிலும் லோரோங் 1ல் உள்ள ‘ஓலியன்டெர் டவர்ஸ்’ தனியார் கூட்டுரிமை வீடுகளிலும் அதிவிரைவில் டெங்கி சம்பவங்கள் பரவக்கூடிய கொசு இனப்பெருக்க இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு செவ்வாய்க்கிழமை தனது இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் 113 கொசு இனப்பெருக்க இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அது கூறியது.
இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து கடந்த சனிக்கிழமை வரை சிங்கப்பூர் முழுவதும் மொத்தம் 216 சம்பவங்கள் பதிவாகின. முந்தைய வாரத்தில் பதிவான 270 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவு.
திங்கள்கிழமை நிலவரப்படி இவற்றில் பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட கொசு இனப்பெருக்கம் செய்த இடங்கள் அபாயகரமான இடங்களாக வகைப்படுத்தப்பட்டன.
இரண்டாவது ஆகப்பெரிய கொசு இனப்பெருக்க வட்டாரமாக தோ பாயோ லோரோங் 1ல் உள்ள ‘த பீக்’கின் புளோக்குகளில் 17 டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டன. இவற்றில் 13 கடந்த இரு வாரங்களில் பதிவானவை.
இதற்கு அடுத்ததாக ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32, பீஷானில் உள்ள ஃபேர் கார்டன் கொண்டோமினியம், த கார்டன்ஸ் அட் பீஷான், இயோ சூ காங்கில் உள்ள கிராண்டே விஸ்டா கொண்டோமினியம் ஆகிய மூன்று இடங்கள் அபாயகரமான டெங்கி பரவும் வட்டாரங்களாக வகைப்படுத்தப்பட்டன.
கடந்த சனிக்கிழமை வரை இவ்வாண்டில் சிங்கப்பூர் முழுவதும் மொத்தம் 4,081 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஸிக்கா சம்பவங்கள் 21 என்ற நிலையிலேயே உள்ளது.