செங்காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக, ஃபெர்ன்வேல் புளோக்குக்கு வெளியே பறவைத் தடுப்பு வலையைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்களைத் தடுத்த குடியிருப்பாளர் ஒருவர்மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தொங்குமேடையில் நின்றுகொண்டு ஊழியர்கள் இருவர் வலையைப் பொருத்த முயன்றனர். அப்போது அந்த புளோக்கில் வசிக்கும் 45 வயது குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே அந்த வலையை்ப பொருத்தக்கூடாது எனக் கூறி, ஊழியர்களின் வேலைக்கு இடையூறாக இருந்தார் என்று அங் மோ கியோ நகர மன்றம் தெரிவித்தது.
புறாக்களும் இதர பறவைகளும் புளோக்குகளின் சுவர்களை அசுத்தப்படுத்துவதைத் தடுக்க நகர மன்றங்கள் புளோக்குகளுக்கு வெளியே பறவைத் தடுப்பு வலையைப் பொருத்தி வருகின்றன.
ஜூன் 21ஆம் தேதி பிற்பகல் 1.26 மணிக்கு புளோக் Block 471C, ஃபெர்ன்வேல் ஸ்திரீட்டில் நடந்த இச்சம்பவம் குறித்த தங்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
ஜூன் 22ஆம் தேதி ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், பணியாளர்களின் வேலைக்கு ஆடவர் ஒருவர் இடையூறாக இருந்தது தெரிந்தது.
“பறவைகளால் எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அந்த வலையை என் வீட்டுக்கு வெளியே பொருத்த நான் சம்மதிக்கவில்லை. அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது,” என்று அந்தக் குடியிருப்பாளர் ஷின்மின் சீன நாளிதழிடம் கூறினார்.

