சிங்கப்பூரின் தெற்கே கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிறைந்து இருக்கும் இடத்திற்கு அருகே அமையவிருக்கும் இரண்டு மீன் பண்ணை இடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் காலவரம்பின்றி தாமதமடையும் என்பது தெரியவந்து இருக்கிறது.
அந்தப் பண்ணைகள் காரணமாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலை எழுந்து இருப்பதே அதற்கான காரணம் என்று தெரியவந்து இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை சென்ற ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. பூலாவ் சாட்டுமு, பூலாவ் ஜோங், பூலாவ் புக்கோம் ஆகிய தீவுகளுக்கு அருகே உள்ள கடல் பகுதிகள், உள்ளூர் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்குச் சாத்தியமான இடங்கள் என்று அந்த மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்தது.
அந்தப் பகுதியில் மீன் பண்ணைகளை அமைப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம் என்று கல்வித் துறையினரும் இயற்கை விரும்பிகளும் கவலை தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் தெரிவித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, பூலாவ் சாட்டுமு, பூலாவ் ஜோங் ஆகிய தீவுகளைச் சுற்றிலும் அமையும் மீன் பண்ணை இடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தைக் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக குறிப்பிட்டது.
ஆய்வாளர்கள், இயற்கை ஆதரவுக் குழுமங்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டு மேலும் பல ஆய்வுகளும் நடத்தி முடிக்கப்படும் வரை ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
இதற்கான காலஅளவு எதையும் அது குறிப்பிடவில்லை.
மீன் பண்ணை அமைவதால் அந்தப் பண்ணைகள் மூலம் கடல்நீர் தரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். பருவநிலை மாற்றங்களின் விளைவுகளும் இருக்கும்.
இவை காரணமாக அந்தப் பகுதியில் காணப்படும் பவளப் பாறைகளுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி அந்த ஆய்வுகள் ஆராயும் என சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பில் மேலும் ஆய்வுகளை நடத்துவது என்ற முடிவை கடல்துறை அறிவியல் அறிஞர்[Ϟ]களும் பழமைவாதிகளும் வரவேற்று இருக்கிறார்கள்.