சிங்கப்பூரில் ஹைட்ரஜனால் இயங்கும் முதலாவது இலகு ரக வாகனம் ஓராண்டு காலத்துக்கு ஜேடிசி ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் சோதனையில் ஈடுபடுத்தப்படும். அச்சோதனை இவ்வாண்டு நான்காம் காலாண்டில் தொடங்கும்.
அச்சிறிய லாரியில் சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் ‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த லாரியில் ஒரு டன் வரையிலான எடை ஏற்றப்படலாம். அது 500 கிலோமீட்டர் வரை ஓடும் திறன் பெற்றது. அது அதிவேகமாக மணிக்கு 44 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஐந்து நிமிடங்களில் அதில் எரிபொருள் நிரப்ப முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன், காற்றழுத்தப்பட்ட கலனுக்குள் உள்ள ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டும் காற்றில் உள்ள பிராணவாயுவைக் கொண்டும் ரசாயன முறைப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் தொடர்பில் நடத்தப்படும் இரண்டாவது சோதனை இது. முதல் முறையாக, 2003ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் A-ரக சிறிய கார்களில் எரிபொருள் மின்கல மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தபோது அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவை அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள பிபி (BP) பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் சாவடியில் எரிபொருளை நிரப்பின. அத்தொழில்நுட்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்ததால் அது கைவிடப்பட்டது.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு வளர்ந்த நாடுகள், தூய்மை எரிசக்தித் திட்டமாக தங்கள் நாடுகளில் அவற்றை ஏற்படுத்திக்கொண்டன.
ஹியுண்டே, பிஎம்டபுள்யூ, டோயோட்டா முதலிய நிறுவனங்கள் தங்கள் சிறிய வாகனங்களுக்கு எரிபொருள் மின்கல மின்சாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
‘ஸ்பெக்ட்ரோனிக்’ லாரி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள தானியங்கி வாகனங்களுக்கான ஆய்வு உன்னத நிலையத்திற்கு ஓட்டி சோதிக்கப்படும்.
அதன் பாதுகாப்புத்தன்மை வெற்றிகரமாகச் சோதித்து பார்க்கப்பட்ட பின்னர், அது ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஜேடிசி கிளீன்டெக் பூங்காவின் சாலைகளில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
லாரியில் உள்ள ஹைட்ரஜன் கலங்கள் காலியானவுடன், அவற்றுக்குப் பதிலாக புதிய கலன்கள் மாற்றப்படும்.
மேலும் ‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனம் உணவு, பொட்டல விநியோகத்தில் ஈடுபடும் சிறிய வாகனங்களிலும் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பொருத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
“இந்தச் சோதனைத் திட்டத்தின் மூலம் ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தி வர்த்தக வாகனத்தின் நம்பகத்தன்மையை ஒரு டன் எடை கொண்ட லாரி ஏற்படுத்தும்,” என்று ‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜொக்ஜமான் ஜாப் தெரிவித்தார்.
மின்கல மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்களைவிட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் அதிக தூரத்தைக் கடக்க முடியும். மேலும் மின்கல மின்சார வாகனங்கள் வெளியாக்கும் கரிம வெளியேற்றத்தைவிட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல வாகனங்கள் கரிமத்தை வெளியாக்காது என்று திரு ஜாப் விவரித்தார்.
“ஸ்பெக்ட்ரோனிக் நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல வாகன சோதனைமுறை, ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் உள்ள நீடித்து நிலைத்திருக்கும் வாகன முறை தீர்வுகளுக்கு ஒரு புதிய மைல்கல். இது இங்கும் இந்த வட்டார நாடுகளுக்கும் பெரிதும் உதவக்கூடும்,” என்றார் ஜேடிசி தளவாட, போக்குவரத்துக் குழுமத்தின் இயக்குநர் திரு அனில் தாஸ்.

