தீவு முழுவதும் உள்ள ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், ஜயண்ட் உள்ளிட்ட பேரங்காடிகளில் ஒரு பிளாஸ்டிக் பைக்கு ஐந்து காசு கட்டணம் நேற்று முதல் வசூலிக்கப்பட்டது.
இருந்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கையோடு பைகளைக் கொண்டு வந்ததால் சுமூகமான சூழல் நிலவியது.
சில வாடிக்கையாளர்கள் தங்களுடன் பைகளைக் கொண்டு வராததால் தயக்கத்துடன் ஐந்து காசு கொடுத்து பிளாஸ்டிக் பைகளை வாங்கினர்.
நார்த்பாய்ண்ட் சிட்டியில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்கு நேற்று வருகையளித்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் டாக்டர் ஏமி கோர், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மறுபயனீட்டுப் பைகள் கொண்டுவந்ததை காசாளர்கள் கண்டதாக தெரிவித்தார்.
பொத்தோங் பாசிரில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடிக்கு வந்த வாடிக்கையாளரான காவோ சுவோ, 60, ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதே ஷெங் சியோங் கடைக்கு வந்த தன்னை திருமதி சிவ் என்று மட்டுமே குறிப்பிட்ட 79 வயது மாது, தனது சொந்த பிளாஸ்டிக் பையை கொண்டு வந்திருந்தார்.
ஆனால் பேரங்காடிகளில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“குப்பைகளை அகற்ற பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் பிளாஸ்டிக் பைகள், வீணாவது இல்லை,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நார்த்பாய்ண்ட் சிட்டியில் தனது மளிகைப் பொருட்களுக்காக பிளாஸ்டிக் பைகளை காசு கொடுத்து வாங்கிய 70 வயது திரு சான் பாக் சாம், “மற்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஐந்து காசு கட்டணம் உண்மையில் ஒரு சிறிய செலவாகும். அதுமட்டுமின்றி, குப்பை போட இந்தப் பைகளை மீண்டும் பயன்படுத்த முடியும்,” என்று சொன்னார்.