சிங்கப்பூரில் $7.47 பில்லியன் மதிப்பிலான ஒருங்கிணைந்த போக்குவரத்துப் பாதையின் சுரங்கச்சாலைப் பகுதி, முன்னதாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் தள்ளி 2029ஆம் ஆண்டில்தான் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் புதிய தேதியைக் குறிப்பிட்ட போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், உட்லண்ட்சிலிருந்து நகர்ப் பகுதி வரையிலான 21.5 கிலோமீட்டர் நீளமான வடக்கு - தெற்குப் பாதை 2027ஆம் ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாகக் கட்டிமுடிக்கப்படும் என்று கூறினார்.
அட்மிரல்டி ரோடு வெஸ்ட் பகுதியிலிருந்து லெண்டோர் அவென்யூ வரையிலான வடக்குத் தெற்குப் பாதையின் மேம்பாலத்தை 2027ல் செயல்படுத்தவும், லெண்டோர் அவென்யூவிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே பகுதி வரையிலான எஞ்சிய சுரங்கச்சாலைகளை 2029ல் செயல்படுத்தவும் இலக்கு உள்ளதாக திரு சக்தியாண்டி சுப்பாட் (பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதி) கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு ஈஸ்வரன் இவ்வாறு கூறினார்.
கட்டுமானப் பணிகளால் ஏற்படும் சத்தம், ஈராண்டுகளில் அடித்தளப் பணிகள் நிறைவுபெற்றதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு ஈஸ்வரன் தெரிவித்தார். இதற்கிடையே, அசௌகரியங்களைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.