உட்லண்ட்ஸ் சென்டர் சாலையிலிருந்து வலதுபக்கமாக திரும்பி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு திரும்ப புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
ஜூலை 17ஆம் தேதியிலிருந்து வாகனமோட்டிகள் அவ்வாறு திரும்பி சோதனைச் சாவடிக்குச் செல்ல முடியாது. ஆனால் பேருந்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்திருந்த குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், வாகனமோட்டிகள் புக்கிட் தீமா விரைவுச் சாலையையோ அல்லது உட்லண்ட்ஸ் சாலை வழியாகவோ சோதனைச் சாவடிக்கு வரலாம் என்று தெரிவித்தது.
இந்தப் புதிய விதிமுறை, பொது விடுமுறை உட்பட எல்லா நேரங்களிலும் அமலில் இருக்கும். இந்த மாற்றம் குறித்த வழிகாட்டிப் பலகைகள் அருகில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் வாகன நெருக்கடியை நிர்வகிப்பதற்காக உச்ச நேரத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எல்லா நேரங்களில் கட்டுப்பாடு நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் கூட்டாக பரிசீலித்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிக்குள் வாகனங்கள் சீராக நுழைய புதிய விதிமுறை உதவும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு மேம்படும் என்று அது நம்புகிறது.

