இந்த வட்டாரத்துக்குச் சேவை வழங்கும் நோக்கில் சிங்கப்பூரில் கூடுதலான விநியோக நிறுவனங்கள் அமைக்கப்படும் நிலையில், மேம்பட்ட மின்னிலக்க அறிவும் விநியோகச் சங்கிலி நிர்வாகத் திறனும் உடையவர்களுக்கான 700 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு வரை உருவாக்கப்படும் அவ்வேலைகள், ‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கானவை.
வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ‘சிங்கப்பூர்-ஆசியாவின் முன்னணி விநியோகச் சங்கிலி நிர்வாக நடுவம்’ எனும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் உற்பத்திக் கட்டமைப்புகள் விரிவாக்கம் காணும் வேளையில், நிறுவனங்கள் அவற்றின் விநியோகச் சங்கிலி நிர்வாகத் திறனை மேம்படுத்துவதாகத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் சிங்கப்பூருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது என்றார் திருவாட்டி லோ.
“பொருளியல் ஈர்ப்பு விசை தென்கிழக்காசியாவை நோக்கித் திரும்புவதால், நிறுவனங்கள் அவற்றின் விநியோகச் சங்கிலி நிர்வாக நடவடிக்கைகளை சிங்கப்பூரில் மேற்கொள்ள முன்வருவதற்கான வாய்ப்புகளை சிங்கப்பூர் வழங்குகிறது,” என்றார் அவர்.
உலக நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் உறவுகளையும் வர்த்தகத் தொடர்பையும் இதுவரை ஈட்டிய நற்பெயரையும் துணையமைச்சர் சுட்டினார்.
கப்பல் போக்குவரத்து, தளவாடத் துறைப் பெருநிறுவனமான ‘மெர்ஸ்க்’ சிங்கப்பூரில் அதன் இரண்டாவது வட்டார விநியோக நிலையத்தை அமைக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த பத்தாண்டுகளில் துவாஸ் துறைமுகம் உலகின் ஆகப் பெரிய தானியக்கத் துறைமுகமாக விளங்கும் என்பதைத் திருவாட்டி லோ சுட்டினார்.
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் விரிவாக்கம் காணுகையில், புதிய சாங்கி ஈஸ்ட் தொழில்துறை வட்டாரம் தயாராகிவிடும் என்பதையும் விமானச் சரக்குகளைக் கையாளும் திறன் 80 விழுக்காடு உயரும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.