சிங்கப்பூர் அனைத்துலக நகைகள் கண்காட்சி மரீனா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு நிலையத்தில் தற்போது நடைபெறுகிறது.
பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் நிதி அமைச்சர், இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
18வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 28 நாடுகளைச் சேர்ந்த 280கும் மேலான நகைக்கடைக்காரர்கள் பங்கேற்கின்றனர்.
வெவ்வேறு நாடுகளில் பல்வேறு வடிவிலான நகைகளைக் கண்காட்சியில் காணலாம்.
மாறும் உலகிற்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய திட்டத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு நகைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்தக் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த பீமா கோல்ட்ஸ் கலந்துகொள்கிறது.
“தென் இந்தியாவில் கால்பதித்துள்ள பீமா கோல்ட்ஸ், அனைத்துலக அளவில் விரிவடைய இந்தக் கண்காட்சி உதவும்,” என்று குறிப்பிட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு விஷ்ணுஷரன் பாட், 34.
சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கென்றே புதிய வடிவமைப்பிலான நகைகளை பீமா நிறுவனம் தருவித்துள்ளது.
“பாரம்பரிய வேலைப்பாடு கொண்ட நகைகள், நவீன வடிவமைப்பிலான நகைகள் என்று எல்லாருடைய தேர்வுக்கும் ஏற்ற பல்வேறு நகைகளைக் கொண்டு வந்துளோம். எங்களது 100 ஆண்டு கால நகைத் தயாரிப்பு அனுபவத்தை அனைத்துலக அளவில் பிரபலப்படுத்துகிறது இந்தக் கண்காட்சி,” என்று கூறினார் திரு விஷ்ணுஷரன்.
“வெளிப்படையாக இருப்பது எங்கள் நிறுவனத்தின் முக்கியப் பண்பு. இது எங்களுக்கு நீண்டகால வாடிக்கையாளர் பலரைப் பெற்றுத்தந்துள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூலை 13 முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நகைப் பிரியர்கள் பலவித நகைகளைக் காணலாம்.