இந்திய சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் தக்காளியின் விலை இந்தியாவில் கடந்த சில நாள்களாக உச்சத்தை அடைந்து தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
தக்காளி இந்திய மதிப்பில் 100 ரூபாய் முதல் 140 ருபாய் வரை விற்கப்படுகிறது. இதுகுறித்த பதற்றமும் குழப்பமும் சிங்கப்பூரர்களிடமும் நிலவுவதைக் காண முடிகிறது.
பொங்கோல், ஜூரோங் ஈஸ்ட் வட்டாரக் குடியிருப்பாளர்களில் சிலரைத் தமிழ் முரசு நேர்கண்டபோது, தக்காளி விலையேற்றம் குறித்து சற்றுக் கவலை இருப்பதாகத் தெரிவித்தனர்.
பல்வேறு காய்கறிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் தக்காளி பெரும்பாலும் மலேசியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
பொதுவாக, இன்று வெள்ளிக்கிழமை கிலோ $1.80 முதல் $ 2 வரை விற்கப்படும் தக்காளியின் விலை, கடந்த வாரம் கிலோ $3.80 வரை சென்றது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், தக்காளி இறக்குமதியில் சிக்கல் எதுவும் இல்லை என்பதால் கடந்த இரண்டு நாள்களாக தக்காளி விலை குறைந்து வழக்கமான நிலைக்குத் திரும்பி வருகிறது.
இதுகுறித்து லிட்டில் இந்தியா வணிகர்களில் ஒருவரான திரு உதயகுமார், 32, கூறுகையில், “தக்காளி சிறிது விலையேற்றம் கண்டபோது இங்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால், சில நாள்களிலேயே விலை கட்டுக்குள் வந்ததால் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்,” என்று கூறினார்.
“தக்காளி வரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. விலையும் கட்டுக்குள்தான் இருக்கிறது. எப்பொழுதும்போல் மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் விலையேற்றம் சிங்கப்பூரை பாதித்ததாகத் தெரியவில்லை,” என்றார் இன்னொரு கடை உரிமையாளரான திரு சின்னதுரை, 27.
மலேசியாவிலிருந்து தக்காளி மொத்த இறக்குமதி செய்யும் திரு அன்பழகன், 42, “மலேசியா அல்லது சிங்கப்பூரில் மழை போன்ற சில காரணிகளால் ஏற்படும் சிறு விலையேற்றத்தைத் தவிர, பொதுவாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள தக்காளி விலையேற்றத்தால் சிங்கப்பூரில் பாதிப்பு இல்லை. நேற்று எப்பொழுதும்போல ஒரு கிலோ தக்காளி இரண்டு வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைக்குத் தட்டுப்பாடோ விலையேற்றமோ இருக்காது,” என்று சொன்னார்.