தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அமைச்சர் ஈஸ்வரனின் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தொண்டூழியர்களையும் ஆர்வலர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் ஈஸ்வரன் ‘சிபிஐபி’ எனப்படும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக விடுப்பில் இருக்கும்போது வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக் குடியிருப்பாளர்களின் நலனில் கவனம் செலுத்தப்படுவதை அக்குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்வர் என்று அமைச்சர் லீ கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை பூன் லே குடியிருப்பாளர்களுக்கான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் அதுகுறித்துத் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன், ‘சிபிஐபி’ விசாரணையில் உதவிவருகிறார். அந்த விசாரணை நிறைவடையும்வரை விடுப்பில் செல்லும்படி அமைச்சர் ஈஸ்வரனுக்கு பிரதமர் லீ சியன் லூங் உத்தரவிட்டிருப்பதாகப் பிரதமர் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், “வெஸ்ட் கோஸ்ட் தொண்டூழியர்களும் ஆர்வலர்களும் நடந்தது குறித்து அதிகக் கவலை அடைந்திருந்தனர். விசாரணை நடைபெறும் வேளையில் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பர் என்றும் அமைச்சர் ஈஸ்வரனின் கடமைகளை அவர்கள் நிறைவேற்றுவர் என்றும் உறுதி கூறினேன்,” என்றார் அமைச்சர் லீ.
அடுத்த திங்கட்கிழமை கிளமெண்டியில் திட்டமிடப்பட்டிருக்கும் அமைச்சர் ஈஸ்வரனின் மக்கள் சந்திப்பிற்குத் தாம் பொறுப்பேற்கவிருப்பதாக அமைச்சர் லீ கூறினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான அடுத்தடுத்த மக்கள் சந்திப்புகளுக்கு அவரும் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஆங் வெய் நெங், திருவாட்டி ஃபூ மீ ஹார், திருவாட்டி ரேச்சல் ஓங் ஆகியோரும் பொறுப்பேற்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி ஆயர் ராஜா-கெக் போ, பூன் லே, நன்யாங், தெலுக் பிளாங்கா, வெஸ்ட் கோஸ்ட் ஆகிய ஐந்து தொகுதிகளை உள்ளடக்கியது.
மக்கள் செயல் கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் கிளைக்கு திரு ஈஸ்வரன் தலைமை வகிக்கிறார்.
அவர் தமது அடித்தள அமைப்புகள் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, “திரு ஈஸ்வரன் இன்னும் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். தமது கடமைகளை ஆற்றுவதில் இருந்து அவர் விடுப்பு எடுத்துள்ளார். அதனால் அவர் விடுப்பில் இருக்கும் காலகட்டத்தில் அவருக்குப் பதில் நாங்கள் அவரது கடமைகளை நிறைவேற்றுகிறோம்,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.