சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரியாக நடித்து மாது ஒருவரை ஏமாற்ற முயன்ற பதின்ம வயது ஆடவர் ஒருவர்மீது, அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சீனக் குடிமகன் லி ஜியாருயி, 19, ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சுவா சூ காங் செண்ட்ரல், புளோக் 353ல் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றார் லி. அவர் அங்கிருந்த ஒரு மாதிடம் தம்மை ‘லின் ஜியாருயி’ என்று அடையாளப்படுத்தி, அப்பெயரைக் கொண்ட சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அட்டையைக் காட்டினார்.
அதன் பிறகு நடந்தவற்றைப் பற்றி நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் அரசாங்க அதிகாரி என்று கூறப்படும் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் திங்கட்கிழமை மாலை வெளிவந்த அறிக்கையில் தெரிவித்தனர்.
விசாரணைகளுக்குப் பிறகு, ஜூரோங் காவல்துறை வர்த்தக விவகாரப் பிரிவும் லியின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதே நாளன்று அவரைக் கைதுசெய்தனர். அவரது வீட்டில் இருந்த மடிக்கணினி, போலி ஆணைய அட்டை, பற்று அட்டை உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
லி தற்போது மத்தியக் காவல்துறைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அவரது வழக்கு விசாரணை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.