சிங்கப்பூரில் விழி வெண்படல அழற்சி நோய் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையிலான விழி வெண்படல நோய் தொற்று கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 75 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிடும் வாராந்தர அறிக்கையின்படி இம்மாதம் 8ஆம் தேதி முடிந்த வாரத்தில் பலதுறை மருந்தகங்களில் விழி வெண்படல அழற்சி நோய்க்காக அன்றாடம் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை சராசரி 63 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அன்றாடம் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளைநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது விழி வெண்படல நோய்க் கிருமிகள் பரவ வழிவகுத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நோய்க் கிருமிப் பரவல் காரணமாகவோ அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் விழி வெண்படல நோய் பாதிப்பே வழக்கமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய்க்கு ஆளாவோர், சாதாரணமாக கண்களில் லேசானதிலிருந்து கடுமையாக அரிப்பு ஏற்படுவதை உணர்வர்.
அத்துடன், விளக்கு வெளிச்சத்தால் கண்கள் கூசி பார்க்க சிரமப்படும் நிலை, கண்களிலிருந்து நீர் வடிவது, கண்களில் இருந்து அழுக்கு வெளிவருவது, மங்கலான பார்வை இவற்றுடன் சில சந்தர்ப்பங்களில் கண்களில் வலியும் ஏற்படலாம். சிலருக்கு கண்களில் ஜவ்வு போன்ற படலமும் கண்களில் ஏற்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதுபற்றிக் கருத்துக் கூறும் த ஸ்ட்ரெய்ட்ஸ் ஐ சென்டரைச் சேர்ந்த டாக்ட்ர் ஜெயந்த், டாக்டர் ஜேசன் லீ ஆகிய இரு மருத்துவர்களும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

