இன நல்லிணக்கத் தினத்தைக் கொண்டாடும் வகையில் வியாழக்கிழமை காலையில் நார்த்புரூக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த பாரம்பரிய வண்ணமய உடை அலங்கார, கலாசார நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மாணவர்கள் நிர்வகித்து நடத்திய கூடங்களில் மூன்று முக்கிய இனங்களைச் சேர்ந்த பல வகை உள்ளூர் உணவுகள், கலாசார கைவினைப் பொருள்கள், பாரம்பரிய உடை அலங்காரப் பொருள்கள் எல்லாம் அந்தப் பள்ளியின் அரங்கில் இடம்பெற்றிருந்தன.
அடுத்ததாக ஒளி, ஒலி காட்சி அறை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மாணவர்கள் தங்களுடைய ஐபேட் சாதனத்தில் ஓவியங்களை வரைந்து கல்வி கற்றனர். அதையும் அதிபர் பார்வையிட்டார்.
இன நல்லிணக்கத் தினம் அதிகாரபூர்வமாக ஜூலை 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் இனம், நன்னெறிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி போதிக்கும் நோக்கத்துடன் பள்ளிக்கூடங்களில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
‘‘நம்முடைய இளம் தலைமுறையினர் ஒன்றாகச் சேர்ந்து நமது பல கலாசார சமூகத்தைப் பற்றி கற்றுக்கொள்வதைக் காணும்போது அது மனநிறைவைத் தருகிறது.
‘‘நாம் பன்மய சமூகத்தில் வாழ்கிறோம். நம்முடைய வேற்றுமை நமக்கு பலம். அதைப் போற்றி கொண்டாடுவது தகும் என்பதை நம்முடைய பிள்ளைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமானது,’’ என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வியாழக்கிழமை ஃபேஸ்புக்கிலும் தெரிவித்தார்.

