வழக்கறிஞரும் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கிறிஸ்டஃபர் டி சூசாவுக்கு எதிரான ஒழுங்குமுறை விசாரணை இம்மாதம் 31ஆம் தேதியன்று மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான புகார்களில் தீர்ப்பளிக்கக்கூடிய அதிகாரம் இந்த மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உள்ளது. அது தவறு இழைக்கும் ஒரு வழக்கறிஞரை சட்ட தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கலாம், அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு நீக்கலாம் அல்லது அபராதம் விதிக்கலாம். மேலும், அந்த வழக்கறிஞருக்கு எதிரான புகாரை தள்ளுபடியும் செய்யலாம்.
திரு டி சூசா புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற துணை நாயகராகவும் உள்ளார். இவர் ஒழுங்குமுறை தவறி நடந்தார் என்று கடந்த 2022ஆம் ஆண்டு புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சுயேச்சையாக செயல்படும் ஒழுங்குமுறை கண்காணிப்பு தீர்ப்பாயம் ஒன்று விசாரணை நடத்தியது. அதில் இவர் ஒழுங்குமுறை தவறி நடந்துள்ளார் என்று அந்தத் தீர்ப்பாயம் கூறியது.
வழக்கு ஒன்றில் கிறிஸ்டஃபர் டி சூசா தமது கட்சிக்காரர் ஒருவர் நீதிமன்றத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறினார் என்றும் அது பற்றி அறிந்திருந்த டி சூசா நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் மூடி மறைத்தார் என்றும் புகார் எழுந்தது.
அத்துடன், அவர் தமது கட்சிக்காரருக்கு உதவும் வகையில் சாட்சியத்தை மறைத்து தமது கட்சிக்காரருக்கு பிரமாண வாக்குமூலம் ஒன்றைத் தயாரித்துள்ளார். அதில் தமது கட்சிக்காரர் நீதிமன்றத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறியதையும் மறைத்துள்ளார்.
திரு டி சூசா ஆம்பர் கம்பவுண்டிங் ஃபார்மசி அண்ட் ஆம்பர் லபாரட்டரிஸ் என்ற கட்சிக்காரருக்காக பணி செய்தபோது இதன் தொடர்பில் அவர் மீது ஐந்து புகார்கள் கூறப்பட்டன. இந்தப் புகார்களை விசாரித்த வழக்கறிஞர்கள் சங்கம் மற்ற நான்கு புகார்களை நிராகரித்தது.
இது குறித்து கூறிய திரு டி சூசாவின் வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான இந்த ஒழுங்குமுறை மீறிய புகாரையும் தள்ளுபடி செய்யக் கோரப்போவதாக தெரிவித்துள்ளனர்.