ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் சிங்கப்பூரில் இருவர் டெங்கியால் உயிரிழந்தனர். இதுவே இவ்வாண்டின் முதல் டெங்கி மரணங்கள்.
2023 இரண்டாம் காலாண்டில் 1,989 பேருக்கு டெங்கி பரவியதாக தேசிய சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காலாண்டு அறிக்கை தெரிவித்தது. முதல் காலாண்டைவிட இது 15.7 விழுக்காடு குறைவு.
இவ்வாண்டின் முதல் வாரத்தில் மட்டும் 279 பேருக்கு டெங்கி பரவிய போதிலும், டெங்கி பரவல் தொடர்ந்து நான்காவது காலாண்டாகக் குறைந்திருக்கிறது. முதல் வாரத்தின் அதிகரிப்புக்கு ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களின் பெருக்கமும் அப்போது நடப்பிலிருந்த கிருமி வகைக்கான எதிர்ப்பு சக்தி மக்களிடையில் குறைவாக இருந்ததும் காரணம் என்று சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
பெண் ஏடிஸ் கொசு கடிப்பதன்மூலம் டெங்கி பரவுகிறது. கடிபட்டு மூன்று முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். மூட்டு வலி, தசை வலி, கண்களுக்குப் பின்னால் வலியுடன் கடுமையான தலைவலி, தோல் அரிப்பு போன்றவை அறிகுறிகளில் உள்ளடங்கும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை அடையாளம் காணப்பட்ட டெங்கி பரவல் குழுமங்களின் எண்ணிக்கை முந்திய காலாண்டைவிட சுமார் 34 விழுக்காடு குறைந்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட 213 குழுமங்களில் 170 அதே காலகட்டத்தில் முடிவுக்கு வந்தன.
ஆனால், இரண்டாம் காலாண்டில் கொசு வாழுமிடங்கள் அதிகமாகக் கண்டறியப்பட்டன. அதிகாரிகள் சுமார் 5,300 கொசு வாழிடங்களைக் கண்டுபிடித்தனர். இது முந்திய காலாண்டைவிட சுமார் 15 விழுக்காடு அதிகம்.
வீடுகளில் கொசுக்கள் அதிகமாக உயிர் வாழும் முதல் ஐந்து இடங்கள் வாளிகள், செடி வைக்கும் தட்டுகள், மலர்ச்சாடிகள், பாய்த்துணி மற்றும் பிளாஸ்டிக் விரிப்புகள், தரைவீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் ஆகியவை. பொது இடங்களில் கொசுக்கள் அதிகமாக வாழும் முதல் ஐந்து இடங்கள் சுற்றுவெளி சாக்கடைகள், வீசப்பட்ட கலன்கள், சாக்கடை வழியடைப்பு, குடியிருப்புப் பேட்டைகளின் சுரங்கச் சாக்கடைகள், மூடப்பட்ட வாகன நிறுத்துமிடச் சாக்கடைகள் ஆகியவை.
டெங்கி கிருமியில் நான்கு வகைகள் இருப்பதால், ஒருவருக்கு நான்கு முறை வரை டெங்கி தொற்ற வாய்ப்புள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை டெங்கி தொற்றும்போது, நோய் கடுமையாக இருக்கவும் மரணம் ஏற்படவும் அதிக ஆபத்துள்ளது. டெங்கிப் பரவல் ஜூன் முதல் அக்டோபர் வரை உச்சத்தில் இருப்பது வழக்கம். வெப்பமான பருவநிலை இதற்கு ஒரு காரணம்.
சிங்கப்பூரில் 2022ல் 19 பேர் டெங்கியால் உயிரிழந்தனர். அவர்களில் நால்வர் ஆண்டின் கடைசி காலாண்டில் மரணமடைந்தனர். அதற்கு முந்திய 2021ஆம் ஆண்டில் ஐவர் உயிரிழந்தனர்.