பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதால் அவருக்குப் பதில், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான திரு பிங் எங் ஹுவாட் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்கிறார்.
புதன்கிழமை நடந்த மக்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கலந்துகொண்டார்.
திங்கட்கிழமை இரவு இதய நோய் காரணமாகத் திரு ஃபைசல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதாகும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுய நினைவுடன் இருப்பதாகப் பாட்டாளிக் கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அல்ஜுனிட் குழுத் தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி சில்வியா லிம், திரு ஜெரால்ட் கியாம், திரு பிரீத்தம் சிங் ஆகியோருடன் கட்சியின் இதர உறுப்பினர்களும் திரு ஃபைசலின் கடமைகளை நிறைவேற்றுவர் என்று பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டிருந்தது.
புதன்கிழமை பிடோக் நார்த் அவென்யூ 1ல் அமைந்துள்ள புளோக் 550ல் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு பேசிய திரு பிங், அடுத்த இரண்டு வாரங்களுக்குத் திரு ஃபைசலுக்குப் பதில் தாம் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்ளவிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரை அவர் ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றியவர்.