டேனியல் கமிஸ், நியூ போக் லெங் இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால நண்பர்கள். ‘மேபோ இஞ்சினியரிங்’, ‘மேபோ மரீன்’ என இரு நிறுவனங்களில் இருவரும் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்துவந்தனர்.
ஆனால் ஈவுத்தொகை, இயக்குநர் ஊதியம் என்ற வகையில் ஏறக்குறைய 636,608 வெள்ளியை எடுத்துக்கொண்ட திரு நியூ அவ்வாறு தனக்கு எதுவும் தராமல் தன்னை ஏமாற்றியதாக திரு டேனியல் வழக்குத் தொடர்ந்தார்.
ஈராண்டுகளாக விசாரிக்கப்பட்ட அந்த வழக்கில் அத்தொகையை திரு டேனியலுக்குத் தரும்படி திரு நியூவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரு நியூவின் நடவடிக்கைகள் வர்த்தகரீதியாக நியாயமற்றவை என்று ஜூலை 4ஆம் தேதி வெளியான தீர்ப்பில் நீதிபதி ஃபிலிப் ஜெயரத்னம் குறிப்பிட்டிருந்தார்.
திரு டேனியலுக்குத் தரவேண்டிய தொகையை வழங்குவதுடன் இரு நிறுவனங்களிலும் திரு டேனியலின் பங்குகளை திரு நியூ வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்பங்குகளின் விலை பின்னர் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.