அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான ஃபைசல் மனாப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வெள்ளிக்கிழமை, பாட்டாளிக் கட்சி ஃபேஸ்புக்கில் அதனைத் தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமை இதயநோயால் திரு ஃபைசல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். குணமடைந்துவரும் அவர் தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டது.
திரு ஃபைசலுக்காக பிரார்த்தனை செய்த, அக்கறை அல்லது வாழ்த்து தெரிவித்த தொண்டூழியர்களுக்கும் நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு முதல் திரு ஃபைசல் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றிவருகிறார்.
அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதால், அல்ஜுனிட் குழுத் தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி சில்வியா லிம், திரு ஜெரால்ட் கியாம், திரு பிரித்தம் சிங் ஆகியோருடன் கட்சியின் இதர மூத்த உறுப்பினர்களும் தொண்டூழியர்களும் திரு ஃபைசலின் கடமைகளை நிறைவேற்றுவர் என்று பாட்டாளிக் கட்சி கூறியுள்ளது.