சிங்கப்பூரில் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் இரண்டு சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் சிக்கிய கார்கள் குடைசாய்ந்தன. ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டிச் சென்ற சந்தேகத்தின் பேரில் மற்றொருவர் கைதானார். சிசில் ஸ்திரீட்டும் கிராஸ் ஸ்திரீட்டும் சந்திக்கும் இடத்தில் ஒரு காரும் டாக்சியும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது.
அதில் சிக்கிய 54 வயது கார் பயணி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உட்லண்ட்ஸ் ரோட்டை நோக்கிச் செல்லும் அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கார் ஒன்று சறுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.
இதில் 27 வயது கார் ஓட்டுநரான ஆடவர் லேசாகக் காயமடைந்தார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதன் சந்தேகத்தின் பேரில் பிறகு அவர் கைதானார்.
புலன்விசாரணை தொடர்கிறது.

