சிங்கப்பூரைவிட்டு புறப்படுவது அல்லது மறுநுழைவு அனுமதியின்றி தொடர்ந்து வெளிநாடுகளில் தங்கியதால் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளில் 2 விழுக்காட்டுக்கும் குறைவானோர் ஆண்டுதோறும் தங்களது நிரந்தரவாசத் தகுதியை இழக்கின்றனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு வியாழக்கிழமை பதிலளித்த உள்துறை அமைச்சு, நிரந்தரவாசிகளின் மொத்த எண்ணிக்கையில் இது மிகவும் சிறிய விகிதம் என்றது.
புள்ளிவிவரத்துறை தரவைப் பொறுத்தமட்டில், 2022 ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூர் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 520,000ஆக இருந்தது.
தற்போது, வெளிநாடு செல்லும் நிரந்தரவாசிகளிடம் செல்லுபடியாகும் மறுநுழைவு அனுமதி இருக்கவேண்டும். சிங்கப்பூருக்குள் மறுபடியும் நுழைய அது அனுமதிக்கிறது.
தற்போதுள்ள சட்டங்களின்கீழ், காலாவதியான மறுநுழைவு அனுமதியுடன் நிரந்தரவாசி ஒருவர் வெளிநாட்டில் இருந்தால், தமது நிரந்தரவாசத் தகுதியை அவர் தானாக இழந்துவிடுவார்.
இனி சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க நிரந்தரவாசிகளுக்கு ஆறு மாத காலஅவகாசம் வழங்கப்படலாம். அந்தத் தறுவாயில் அவர்கள் தங்களது நிரந்தரவாசத் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
குடிநுழைவு (திருத்த) சட்ட மசோதாவின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன. உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோவால் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அந்த மசோதா முதல் வாசிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நிரந்தரவாசத் தகுதியுடன் தொடர்புடைய முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய சட்டத்தின்கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் உரிமையை நீக்கவும் இந்த மசோதாவில் முன்மொழியப்படுகிறது.
அதன்படி, ஒருவரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து செய்யப்பட்டால், அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய அவரால் முடியாது.
ஆண்டு ஒன்றுக்கு அமைச்சருக்கு சுமார் 10 மேல்முறையீடுகள் கிடைப்பதாக உள்துறை அமைச்சு வியாழக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.