நார்த் பிரிட்ஜ் சாலையில் தடுப்புவேலிமீது வெள்ளிக்கிழமை டாக்சி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காலை 11.42 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த விபத்தில் மற்றொரு காரும் சம்பந்தப்பட்டது.
சவுத் பிரிட்ஜ் சாலையை நோக்கிச்செல்லும் நார்த் பிரிட்ஜ் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. டாக்சி மோதிய தடுப்புவேலிக்கு எதிரே நார்த் பிரிட்ஜ் ரோடு சந்தை, உணவு நிலையம் உள்ளது.
62 வயது டாக்சி ஓட்டுநர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இச்சம்பவத்தில் லேசாக காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.