வலசைபோகும் பறவைகள் பாதுகாப்பு: சிங்கப்பூரருக்கு விருது

வலசைபோகும் பறவைகள் பாதுகாப்பு: சிங்கப்பூரருக்கு விருது

2 mins read
c31307bb-b370-4203-92a2-4411e627b7b3
உள்ளான் இனத்தைச் சேர்ந்த இந்தச் சிறு பறவை கடைசியாக 1999ல் சிங்கப்பூரில் தென்பட்டன. - படம்: துவான் வோ செரில் டான்.

‘பேர்டுஃலைப் இன்டர்நேஷனல்’ என்ற அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த உயிரியல் பழமைப் பாதுகாப்பு ஆதரவாளரான டாக்டர் யோங் டிங் லி வலசைபோகும் பறவைகளை ஆராய்வதில், அவற்றைப் பாதுகாப்பதில் மிக நாட்டம் உள்ளவர்.

சீனாவின் சகதி நிலம், ஈர நிலப்பகுதிகள் முதல் தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகள் வரை எங்கும் சென்று உயிரியல் பழைமைப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுவதில் அவருக்கு நாட்டம் அதிகம்.

பூமியின் வடதுருவத்தின் கடும் குளிரைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஜூலை மாதத்திற்கும் டிசம்பருக்கும் இடையில் வலசைப் போகும் பறவைகள்-குறிப்பாக உள்ளான் இனத்தைச் சேர்ந்த சிறு பறவைகள் தங்கள் நெடும் பயணத்தை தொடங்கும்.

வெறும் 40 கிராம் எடையுள்ள உள்ளான் பறவை, ரஷ்யாவில் இருந்து 5,000 கிலோமீட்டர் பறந்து சீனாவின் ஈர நிலத்திற்கு வரும். அங்கிருந்து பிறகு அது மேலும் 4,000 கிமீ பயணத்தைத் தொடங்கி தாய்லாந்தை அடையும் என்று அவர் விளக்கினார்.

சிங்கப்பூரில் சாங்கி சவுத்தில் 1999ல் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல்நாள் மேலும் இருவருடன் சென்று அந்தப் பறவையைக் கடைசியாக டாக்டர் யோங் பார்த்தார்.

அப்போது உலகில் அந்த இனப் பறவைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 2,000 முதல் 3,000 வரை இருந்தது.

ஆனால் இப்போது வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ள அவற்றின் எண்ணிக்கை 490தான் என்று மதிப்பிடப்படுவதாக அவர் கூறினார்.

வலசைப் போகும் பறவைகள் தொடர்பில் சிங்கப்பூரரான டாக்டர் யோங் ஆற்றி இருக்கும் செயற்கரிய சேவையைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு ஜூலை 24ஆம் தேதி பழமைப் பாதுகாப்பாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் உயிரியல் பழைமைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு அந்த விருதை வழங்குகிறது.

படிப்பை முடித்து பத்து ஆண்டுகளுக்குள் பழைமைப் பாதுகாப்பு முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க தொண்டாற்றி இருப்போருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்