மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இஸ்கந்தர் புத்ரியில் கேஎம்9.5 இரண்டாவது இணைப்பில் லாரி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து சிங்கப்பூரரான ஆடவர் ஒருவர் மாண்டார்.
அவருடன் மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணம் செய்தவர் காயம் அடைந்தார்.
அந்த 23 வயது ஆடவர் வெள்ளிக்கிழமையன்று தனது 22 வயது காதலியுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றதாகவும் இரவு 10.30 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாகவும் இஸ்கந்தர் புத்ரி காவல்துறை உதவி ஆணையர் ரஹ்மட் ஆஃப்ரின் தெரிவித்தார்.
“விபத்தில் சிக்கிய இருவரும் சிங்கப்பூரர்கள். அவர்கள் ஜோகூர் பாருவுக்குச் சென்றுகொண்டு இருந்தார்கள். முன்பக்கம் சென்றுகொண்டு இருந்த லாரியின் இடது பக்கத்தில் மோட்டார்சைக்கிள் மோதிவிட்டதாக முதல்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
“காயம் அடைந்த மாதுக்குச் சனிக்கிழமை சுயநினைவு வந்தது. சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்க அந்த மாதின் உறவினர்கள் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியை 49 வயது ஆடவர் ஓட்டிவந்ததாகவும் அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் உதவி ஆணையர் கூறினார். இந்த விபத்து பற்றி புலன்விசாரணை நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.