ஞாயிற்றுக்கிழமை மாலை செந்தோசா தீவுக்குச் சென்றோருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு வானில் கரும்புகை வளையம் தென்பட்டதால் அது என்ன வானிலை நிகழ்வாக இருக்கும் என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்தது.
அங்கிருந்த 31 வயது நூருதீன் செலாமாட், அந்த வளையத்தைக் காணொளி எடுத்து டிக்டாக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது 17,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
மெதுவாக நகர்ந்த அந்த வளையம், சில நிமிடங்களுக்குப் பிறகு படிப்படியாக மறையத் தொடங்கியது. முன்னதாக அந்த வளையம் நகர நகர அங்கிருந்த மக்களும் அதைப் பின்தொடர்ந்தனர்.
இதற்கு முன்பு 2017லும் 2022லும் செந்தோசாவில் இதுபோன்ற கரும்புகை வளையங்கள் தென்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வளையம் குறித்து கூடுதல் விவரம் பெற செந்தோசாவையும் வானியல் ஆய்வு நிபுணர்களையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.