அனைவரும் போற்றும் தாயகமாக சிங்கப்பூரை மாற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் செவ்வாய்க்கிழமை அன்று கேட்டுக் கொண்டார்.
பாட்டாளிக் கட்சியின் தேசிய தினச் செய்தியில் அக்கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங், 1998ஆம் ஆண்டின் ‘ஹோம்’ எனும் பிரபலமான தேசிய தினப் பாடல் 2023ஆம் ஆண்டில் எவ்வாறு உருமாறியது மற்றும் காலத்திற்கு ஏற்ற தேசியக் கொள்கைகளின் அவசியம் பற்றி பேசினார்.
“கால் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சிங்கப்பூரும் உலகமும் வேறு ஒரு கட்டத்தில் இருந்த சமயத்தில் ‘ஹோம்’ பாடல் எப்படி காலத்திற்கு ஏற்ப மாறியதோ, அதே போல நமது தேசியக் கொள்கைகளை இன்றைய சிங்கப்பூருக்குப் பொருத்தமாக மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பிரித்தம் சிங் கூறினார்.
‘ஹோம்’ பாடல் வரிகள் நம்மை தாயகத்துடன் ஆழமாக இணைத்து கடந்த கால விலை மதிப்பில்லா நினைவுகளைத் தழுவி, நமது எதிர்காலக் கனவுகளைத் தூண்டியது.
பிரச்சினையான சமயங்களில் ஆறுதல் அளிக்கும் வகையில் ஹோம் பாடல் அமைந்தது.
அந்த வகையில் அண்மைய சர்ச்சைகளால் ஒரு சுயபரிசோதனைக் கட்டத்தை அனுபவித்து வரும் சிங்கப்பூர், சவால்களை சமாளிக்கும் வழிகளைக் கண்டறியும்,” என்று திரு சிங் குறிப்பிட்டார்.
அண்மைய வாரங்களாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைகளில் சிக்கினர்.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார். நாடாளுமன்ற முன்னாள் நாயகர் டான் சுவான் ஜின்னும் மக்கள் செயல் கட்சியின் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் தங்களுக்கு இடையிலான தகாத உறவால் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
பாட்டாளிக் கட்சியிலும் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, மூத்த கட்சி உறுப்பினர் நிக்கோல் சியா ஆகிய இருவரும் தங்களுக்கு இடையிலான ரகசிய உறவு காரணமாக கட்சியிலிருந்து விலகி விட்டனர்.
இந்த நேரத்தில் எல்லோரும் போற்றும் நாடாக சிங்கப்பூரை மாற்ற வேண்டும் என்ற தலைப்பிலான தமது செய்தியில் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் புத்துயிர் அளிக்கும் வகையில் கவனம் தேவை என்று திரு சிங் வலியுறுத்தியுள்ளார்.