தனிமையில் வாழ்வதால் ஏற்படும் பல சிக்கல்களை தவிர்க்க முதியோருக்கு உதவும் வகையில் பல சமூக அமைப்புகள், குடும்பங்கள், அரசாங்கம், நிறுவனங்கள் போன்றவை இணைந்து செயல்பட வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவ்வமைப்பு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் சண்முகம் இவ்வாறு சொன்னார்.
தனது வருங்கால சமூகத் திட்டங்களுக்கு நிதி திரட்டவும் முதியோர்கள் தன்னம்பிக்கையுடன் தனியாக வாழவும் ஊக்குவிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய ‘நம்பிக்கையுடன் வாழ்வோம்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் ஓர் இரவு உணவு நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண மிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியாவின் ‘டிசிஎஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு செயலி மூலம் முதியோரின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து, தனிமையில் இருக்கும் பயத்தைப் போக்க உதவும் என்று ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் தலைவர் எஸ் தேவேந்திரன் கூறினார்.
“மூப்படையும் சிங்கப்பூர் சமுதாயத்தைத் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சுகாதார அமைச்சின் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்திற்கு ஏற்ப இத்திட்டங்கள் அமையும்,” என்று திரு எஸ் தேவேந்திரன் உறுதிபூண்டுள்ளார்.
தனிமையில் வாழும் முதியோர், உடற்குறையுடன் வீட்டில் வாழும் முதியோர் ஆகியோருக்கு சுயமாக வாழும் வாய்ப்பை அளிப்பதோடு, அவசர காலங்களில் தனிமையில் துன்புறாமல் உதவிபெறுவதற்கான உறுதுணையையும் இந்தத் தொழில்நுட்பம் வழங்கும் என்று அமைப்பின் நிர்வாக, தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ராஜ் குமார் குறிப்பிட்டார்.
“முதியோர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி மேம்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவும். அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் மாறுபட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றால் அவற்றை இந்தத் தொழில்நுட்பம் கண்டறிந்து பராமரிப்பாளர்களுக்கு அறிக்கைகள் அனுப்பும். அவசர உதவிக்கு அழைக்கும் அம்சமும் இதில் அடங்கும்,” என்று கடந்த ஏழு மாதங்களாக இதற்காகப் பணியாற்றிய திரு ராஜ் குமார் தமிழ் முரசிடம் கூறினார்.
ஆர்க்கிட் கன்ட்ரீ கிளப்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1,000 பேர் வந்திருந்தனர். ஆடல் பாடலுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சியில் அமைப்பின் புதிய முயற்சிகளும் அறிவிக்கப்பட்டன. எவ்வளவு நிதி திரட்டப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.