சிங்கப்பூரின் உலக முதலீட்டு நிறுவனமான தெமாசெக், தனக்குச் சொந்தமான பெவிலியன் எனர்ஜி என்ற நிறுவனத்தில் சில சொத்துகளை விற்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
அதன் மூலம் குறைந்தபட்சம் US$2 பில்லியன் (S$2.7 பில்லியன்) தொகை மதிப்பீட்டை அது எதிர்பார்ப்பதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அந்த விற்பனை தொடர்பில் பார்க்லேஸ் நிறுவனத்துடன் தெமாசெக் செயல்பட்டு வருகிறது.
விற்பனையில் குழாய் எரிவாயுத்தொழில் சேர்க்கப்படவில்லை. இதை முக்கியமான சொத்தாக சிங்கப்பூர் கருதுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பெவிலியன் எனர்ஜி நிறுவனம், திரவ இயற்கை எரிவாயுவைக் கையாளும் நிறுவனம். அதை வாங்கிக்கொள்வதில் கொள்முதல் நிறுவனங்களிடம் எந்த அளவுக்கு நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டறிய தெமாசெக் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறது.
விற்பனை பரிசீலனை தொடக்கக் கட்டத்தில்தான் இருக்கிறது. நிறுவனத்தை நீண்ட காலத்திற்குத் தன்னிடமே வைத்திருக்கலாம் என்று தெமாசெக் முடிவு செய்ய இன்னமும் வாய்ப்புகள் உள்ளன.
தெமாசெக் உலகின் ஆகப்பெரிய அரசாங்க முதலீட்டு அமைப்புகளில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் US$492 பில்லியன் என்று தெரியவந்துள்ளது.
பெவிலியன் எனர்ஜி நிறுவனம், தெமாசெக்கிற்கு முற்றிலும் சொந்தமானது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் திரவ இயற்கை எரிவாயுவை விற்பனை செய்கிறது. கப்பல்களில் ஏற்றுமதியும் செய்கிறது. அது 2013ல் அமைக்கப்பட்டது.
தான்சானியா எரிவாயு கட்டமைப்பில் சுமார் 20% பாத்தியதையை சுமார் US$1.3 பில்லியன் தொகைக்குப் பெவிலியன் எனர்ஜி கொள்முதல் செய்தது.
மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்குத் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்றாக அதைச் சிங்கப்பூர் நியமித்தது.