சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாத முதல் பாதியின் வறட்சியான பருவநிலை இரண்டாம் பாதியிலும் தொடரும் என்று கணிக்கப்படுகிறது. ஒருசில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் மழை குறைவாகப் பெய்யும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைக்கிறது.
சில நாட்களுக்கு, தீவின் பல்வேறு பகுதிகளில் காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் குறுகிய நேரம் இடியுடன் மழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிடக் குறைவான மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வு நிலையம் தெரிவித்தது.
அடுத்த இரு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் வெப்பமாக இருக்கும். அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசாக இருக்கும்.
“சில நாட்களில் இரவிலும் வெப்பமாக இருக்கும். அந்நாட்களில், குறிப்பாக தென்கிழக்கு வட்டாரங்களில் வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியசாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஆய்வு நிலையம் தெரிவித்தது.

