தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோலில் புதிய ரத்த வங்கி

2 mins read
8274d5a0-66fe-4498-8baa-a1d9b98b27bf
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், புதிய ரத்த வங்கி திறப்பு விழாவில் கலந்துகொண்டார். ரத்த நன்கொடை செய்யும்படி ஓ-பிளஸ், ஓ-மைனஸ் வகை ரத்தம் உள்ளவர்களை அமைச்சர் அண்மையில் கேட்டுக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன் பொங்கோல் ஒருங்கிணைந்த சமூக மையத்தில் புதிய ரத்த சேகரிப்பு நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.

மக்கள் வசிக்கின்ற, வேலை பார்க்கின்ற, படிக்கின்ற, விளையாடுகின்ற இடங்களுக்கு அருகே ரத்த வங்கிகளை அமைத்து மேலும் நன்கொடையாளர்களை, குறிப்பாக இளையர்களைக் கவர்வது சுகாதார அறிவியல் ஆணையத்தின் இலக்காகும்.

சிங்கப்பூரில் ரத்தத்திற்கான தேவை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

இந்தத் தேவை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 4% அதிகரித்தது. 2018ல் 110,823 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. அது சென்ற ஆண்டில் 115,794 யூனிட்டாகக் கூடியது.

“வாரஇறுதி நீண்ட விடுமுறையின்போதும் பள்ளிக்கூட விடுமுறைக் காலத்தின்போதும் நன்கொடை குறைவதாலும் தேவை அதிகரிப்பதாலும் ரத்த வங்கிகளில் இருப்பு ஆபத்தான அளவுக்குக் குறைந்துவிடுகிறது.

“தேவையை ஈடுசெய்ய இடைவிடாமல் போராடி வருகிறோம்,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் மிமி சோங் மே லிங் கூறினார்.

ஒன் பொங்கோலில் அமைந்துள்ள புதிய ரத்த நிலையம் அன்றாடம் 100 யூனிட் வரை ரத்தத்தைச் சேகரிக்கும்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், புதிய ரத்த வங்கி திறப்புவிழாவில் கலந்து கொண்டார். ரத்த நன்கொடை செய்யும்படி ஓ-பிளஸ், ஓ-மைனஸ் வகை ரத்தம் உள்ளவர்களை அமைச்சர் அண்மையில் கேட்டுக்கொண்டார்.

இளையர்களில் மேலும் பலர் ரத்த நன்கொடையாளர்களாக திகழ ஊக்கமூட்டும் வகையில் விருதுத் திட்டம் ஒன்றை அமைச்சர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

பொங்கோலில் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ள ரத்த வங்கி, சிங்கப்பூரில் செயல்படும் ஐந்தாவது ரத்த வங்கியாகும். அது, செவ்வாய்க்கிழமை தவிர, வார நாள்களில் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

வார இறுதி நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இரண்டும் வியாழக்கிழமை ரத்த வங்கியைத் தத்தெடுக்கும் செயல்திட்டத்தைத் தொடங்கின.

இத்திட்டத்தின்படி சமூக அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது நிறுவனக் கழகங்கள் ரத்த வங்கியுடன் சேர்ந்து செயல்பட்டு ரத்த நன்கொடையாளர்கள் போதிய அளவுக்கு எப்போதும் கிடைப்பதை உறுதிப்படுத்த முயலும்.

புதிய பொங்கோல் ரத்த வங்கியை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் (எஸ்ஐடி) சோகா காக்கி சிங்கப்பூர் என்ற பௌத்த நிறுவனமும் தத்து எடுத்துக்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்