பசிபிக் தீவு நாடான பாலாவ்விற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விமானச் சேவையை நடத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை என்று சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அந்தச் சேவையை நடத்த அந்நிய நிறுவனங்கள் செயல்பாட்டு அனுமதியைப் பெற வேண்டும்.
அதைப் பெற அலாய் பாலாவ் நிறுவனமோ வேறு எந்த நிறுவனமோ விண்ணப்பம் எதையும் செய்யவில்லை என்று ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், சிங்கப்பூருக்கும் பாலாவ் நாட்டிற்கும் இடையில் வர்த்தக விமானச் சேவை செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்தச் சேவையை திங்கட்கிழமைகள், புதன்கிழமைகள், வெள்ளிக்கிழமைகளில் வாரம் மூன்று சேவைகளாக நீட்டிக்கத் திட்டமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி நிலவரப்படி விமானச் சேவை அனுமதியைப் பெறுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும் வரவில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

