ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி, குடும்பத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தால் நல்ல வேலைகளைத் தேட பயிற்சி செய்வது சிரமமாக இருக்கலாம்.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டெழுவதற்கு உதவும் பொருட்டு புதியதொரு திட்டத்தை அரசாங்கம் தொடங்கவுள்ளது. மேம்பட்ட நீண்டகால வேலைக்கு திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்த வகைசெய்யும் தற்காலிக நிதியாதரவை இத்திட்டம் வழங்கும்.
இத்திட்டத்தின் விவரங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாக தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங், முன்னேறும் சிங்கப்பூர் திட்டம் முடிவுறும்போதும் மேல்விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.
“நீங்கள் முயற்சி எடுக்க முன்வந்தால், உங்களுக்கு உதவ அரசாங்கம் கூடுதலானவற்றைச் செய்யும்,” என்றார் அவர்.
பேரணியில் மலாய் உரையின்போது பேசிய பிரதமர் லீ, மின்னிலக்கத் தளம் போன்று பலதரப்பட்ட வேலைவாய்ப்புகளுடன் பொருளியல் துறைகள் உருவெடுத்துள்ளதைச் சுட்டினார்.
எனினும், இந்த வேலைவாய்ப்புகளால் ஆக அண்மைய வேலை நிலவர போக்கிற்கு ஈடுகொடுக்க முடியுமா என்ற கவலை எழுந்துள்ளது. தங்களது வேலை இயந்திர மனிதன் அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுவதைப் பிரதமர் லீ சுட்டினார்.
“வேலையில் கூடுதல் இடையூறுகள் ஏற்படுவதை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அத்தகைய இடையூறுகளால் கூடுதலான ஊழியர்கள் பாதிக்கப்படுவர். தங்கள் வாழ்க்கைத் தொழிலில் பலமுறை தங்களது வேலைகளை அவர்கள் இழக்கக்கூடும்,” என்றார் அவர்.
தனிநபர் அடையாளத்தைக் குறிக்கும் ஒருவரின் வேலை
வாழ்வாதாரம் ஒருபுறம் இருக்க, தனிநபர் அடையாளத்தைக் குறிக்கும் ஒருவரின் வேலை, அவருக்குப் பெருமை உணர்வையும் அவரின் பிள்ளைகளுக்கு உத்வேகத்தையும் தருவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
எனவேதான், ஆட்குறைப்பு செய்யப்படும்போது ஏமாற்ற உணர்வை அடைவதோடு தன்னம்பிக்கையையும் ஊழியர்கள் இழக்கக்கூடும்.
வேலை இழந்தோர், நீண்டகாலத்திற்காக சிறந்த வேலைகளைத் தேட மறுபயிற்சிக்குச் செல்வதே மீண்டெழுவதற்கான வழி என்று பிரதமர் லீ கூறினார். ஊழியர்கள் புதிய திறன்களைப் பெற்று புதிய துறைகளுக்கு மாறவும் வேலை தேடுவதில் அவர்களுக்கு உதவவும் அரசாங்கம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
கிடைக்கும் வேலைகளில் அவசரமாக சேர்வதற்குப் பதிலாக, ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்தி, சிறந்த நீண்டகால வேலைக்குத் தயார்செய்யும்போது தங்களது உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தற்காலிக உதவியாக இத்திட்டம் அமையும் என்று பிரதமர் லீ கூறினார்.
தொழிலாளர், முதலாளி பிரதிநிதிகள் அடங்கிய பணிக்குழு ஒன்று, ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு நிதியாதரவு வழங்க 2021 அக்டோபரில் அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை தேடுவதில் தாங்கள் எதிர்நோக்கிய சிரமங்கள் குறித்து முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்போது பகிரவும் செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்-பிசினஸ் டைம்ஸ் கலந்துரையாடல் நிகழ்வில் இதுகுறித்துப் பேசிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மறுவேலைநியமன ஆதரவுத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கோடிக்காட்டி இருந்தார்.