தோ பாயோவில் உள்ள ஒரு சிறிய சாலைச் சந்திப்பில் கார் ஒன்று சறுக்கியதில் அந்த வாகனத்தின் 38 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
லோரோங் 6 தோ பாயோவில் இருந்து பிராடல் ரோட்டிற்கு மாறிச் செல்லக்கூடிய அந்த சாலையில் இந்த விபத்து திங்கட்கிழமை காலையில் நிகழ்ந்தது.
விபத்து குறித்து முற்பகல் 11.25 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.
சாலையின் நடுவே மஞ்சள் நிற கார் ஒன்று குப்புறக் கவிழ்ந்து கிடப்பதையும் சாலை ஓரம் இருந்த போக்குவரத்து சமிக்ஞை பலகை உடைந்து விழுந்திருப்பதையும் புகைப்படங்கள் காட்டின.
விபத்து குறித்த விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்தது.