வாகன பரிசோதனை நிறுவனமான விகோமில் சேவை ஆலோசகராகப் பணியாற்றிய சுசன் சியா சோ எங், 59, 2016க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் பலரிடமிருந்து மொத்தம் $26,820 லஞ்சம் பெற்றார். லஞ்சம் கொடுத்தவர்களில் மோட்டார் வாகன பழுதுபார்ப்புப் பட்டறைகளின் இயக்குநர்களும் அடங்குவர்.
லஞ்சம் பெற்றதற்குக் கைமாறாக, வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது வாகனங்கள் விகோமில் இல்லாமல் விபத்து குறித்த தகவல்களை சியா தாக்கல் செய்தார்.
லஞ்சம் பெற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை அவருக்கு 20 வாரச் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டத்தொகையாக $8,270 செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அபராதத்தையோ தண்டத்தொகையையோ செலுத்த முடியாவிட்டால், கூடுதலாக 10 வாரங்கள் சிறைத் தண்டனையை சியா அனுபவிக்க நேரிடும்.
அவர் இன்னும் விகோம் நிறுவனத்தில் பணியாற்றுகிறாரா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள், விபத்து தொடர்பான தகவலைச் சமர்ப்பிக்க அதிகாரபூர்வ பட்டறைக்கு தங்களது வாகனங்களுடன் செல்ல வேண்டும்.
வாகனத்துக்கு ஏற்பட்ட சேதம் தன்னிச்சையான குழு ஒன்று மதிப்பிடுவதை இது உறுதிசெய்கிறது. மோட்டார் வாகன காப்புறுதி நிறுவனங்களுக்கான கோரிக்கை தொகையும் அந்த அறிக்கையில் அடங்கும்.


