ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்திற்கு வெளியே அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
49 வயது மதிக்கத்தக்க ஆடவரின் சடலம் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அவர் கல்லூரிக்குத் தொடர்பில்லாதவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பேச்சாளர் கூறினார்.
கல்லூரி வளாகத்தின் சுற்றுவேலியை அடுத்துள்ள புல்சரிவில் சடலம் கிடப்பதைக் காட்டும் படங்கள் ‘ஸ்டோம்ப்’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தன.
சற்று தள்ளி கையுறைகள் மற்றும் முகக்கவசங்களுடன் காவல்துறை அதிகாரிகள் நிற்கும் வேறு சில படங்களும் அந்தத் தளத்தில் இருந்தன. நிலவனப்பு ஊழியர்கள் அந்தச் சடலம் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தரைதக் கண்டதாக ‘ஸ்டோம்ப்’பிடம் ஒருவர் கூறினார்.
அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்த வேளையில் சம்பந்தப்பட்ட புல்வெளிப் பகுதி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு அடைக்கப்பட்டு இருந்ததாகவும் மாலை 6.30 மணியளவில் சடலம் அகற்றப்பட்டதாகவும் ஸ்டோம்ப் தெரிவித்தது.
சடலமாக இருந்த ஆடவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி புல்சரிவில் இருந்ததை கண்காணிப்புப் படக்கருவி காட்டியதாக ஸ்டோம்ப்பிடம் பேசியவர் குறிப்பிட்டார்.
7 உட்லண்ட்ஸ் அவென்யூ 9ல் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்திருப்பது குறித்து சனிக்கிழமை பிற்பகல் 2.45 தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் விசாரணை தொடருவதாகவும் காவல்துறை தெரிவித்தது