இந்தியாவின் பன்மய, பரந்த, பெரிய சந்தை, ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் உரிய நுழைவாயிலாக வேகமாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில், சிங்கப்பூரின் புதிய, நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களை இந்தியாவில் அதிகப்படுத்தும் வகையில் அலுவலகங்களை அமைக்கின்றன.
இத்தகைய நிறுவனங்கனின் எண்ணிக்கை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது.
துணைக்கோள வரைபடத் துறை நிறுவனங்கள், இயந்திர மனித ஆற்றல் கணினித் தகவல் பகுப்பாய்வு நிறுவனங்கள் முதல் மின்னியல் கழிவுப் பொருள்களை மறுசுழற்சிக்கு ஈடுபடுத்தும், சுத்தப்படுத்தும் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வரை குறைந்தபட்சம் 300 சிங்கப்பூர் புதிய நவீன நிறுவனங்கள் 2019ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் ஈடுபட்டு வந்துள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பல மொழிகளைப் பேசக்கூடியர்கள். பன்மய வட்டாரங்களும் இந்தியாவில் அதிகம். இவை சிங்கப்பூரின் தொடக்கக்கால புதிய நவீன நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கின.
அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஆற்றலை வலுப்படுத்திக் கொண்டு பல்வேறு வகையான இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருள்களை, சேவைகளை அந்த நிறுவனங்கள் பரிசோதித்துப் பார்த்தன.
இத்தகைய நிறுவனங்களில் ஸ்மார்ட்கிளீன் என்ற நிறுவனம் ஒன்று. சிங்கப்பூரில் 2017ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கணினித் தகவலைக் கொண்டு துப்புரவுத் துறை தீர்வுகளைக் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்.
இதன் இந்தியக் கிளையின் தலைவரான திரு நிஷானி குமார், இந்தியாவே ஒரு கண்டம் போன்றது என்றார்.
தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்குத் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்தியா நல்ல ஒரு சந்தை என்று அவர் கூறினார்.
இந்திய நிலவரங்களுக்கு ஏற்ப எல்லாம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு குறைகள் எல்லாம் களையப்பட்டு அனைத்தும் முழுமையாக தயாரானதும் இந்தோனீசியா, துபாய், மலேசியா நாடுகளில் நிலச்சொத்து வாடிக்கையாளர்களை வர்த்தக ரீதியில் எட்டும் அளவுக்கு இந்த நிறுவனத்தின் மின்னிலக்க துப்புரவு நிர்வாகச் சேவைகள் ஆயத்தமாகிவிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
போட்சிங்க் என்ற இயந்திர மனித தொழில்நுட்ப நிறுவனம் 2017ல் சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து பகுதிப் பெருள்களைச் சேர்த்து இயந்திர மனித சாதனங்களை உருவாக்கும் ஆலையையும் ஆய்வு நிலையத்தையும் பெங்களூருவில் அமைத்தது.
பொருள்களைத் தூக்கக்கூடிய இயந்திர மனித சாதனங்களை உருவாக்கி தளவாடப்போக்குவரத்து, உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு அவற்றை இந்த நிறுவனம் விற்கிறது.
இது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தனது இயந்திர மனிதச் சாதனங்களை விற்று இருக்கிறது. இந்தியாவின் இயந்திர மனிதத் தொழில்நுட்ப ஆற்றல், நேரடி அனுபவ வாய்ப்பு வசதிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் கொள்முதல்காரர்களை ஈர்த்துள்ளது.
அதேபோல் 2018ல் நிறுவப்பட்ட எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு இந்தியாவில் சீராக விரிவடைந்து வருகிறது.
சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புத்தாக்க முறைகளைக் கைக்கொண்டு உலகமயமாக உதவுவது எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நோக்கம்.
இந்த அமைப்பு, 2022ல் சிங்கப்பூரைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் உள்ள புதிய வாய்ப்புகளை நாட ஆதரவு அளித்தது.
இந்தியா தொடர்ந்து நகரமயமாகி வருகிறது. மின்னிலக்க ரீதியில் அதன் போட்டித்திறன் அதிகமாகி வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகள், உற்பத்தித்துறை, வாழ்க்கைப் பாணி, பயனீட்டாளர் துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மேலும் மேலும் ஈர்ப்புமிகு சந்தையாக இந்தியா உருவாகி வருகிறது என்று ஜி ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவர், தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்காவில் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஈடுபடும் பணிகளை மேற்பார்வையிடும் நிர்வாக இயக்குநர்.