நாடாளுமன்றமே அதிபரை நியமிக்கும் பழைய முறையே சிங்கப்பூருக்குச் சிறந்ததாக இருக்கும் என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியான் தெரிவித்தார்.
பிரச்சினைகளைச் சமாளிக்க முயலும்போது மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபரின் கைகள் கட்டப்பட்டு இருக்கும் பட்சத்தில் அத்தகைய அதிபரைக் கொண்டு இருப்பதில் எந்தப் பலனும் இல்லை என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சமூகம் சனிக்கிழமை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அதன் உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அதில் திரு டான் இவ்வாறு கூறினார்.
அந்த நிகழ்ச்சி திரு டானின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
தான் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் பிரதமரை காலக்கிரம முறைப்படி சந்தித்து சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விவகாரங்கள் குறித்து அவருடன் பேசப்போவதாகத் திரு டான் உறுதி கூறினார்.
அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க எப்படி செயல்படுவீர்கள் என்று கேட்டபோது, அவை எல்லாம் அரசாங்கத்தைப் பொறுத்தது என்று அரசாங்கம் கூறுகிறது.
பிரதமருடன் காலக்கிரம முறைப்படி சந்திப்புகளை நடத்தி இந்தப் பிரச்சினைகளை அவரிடம் எழுப்புவேன். இதைத்தான் நான் செய்ய முடியும் என்றாரவர்.
என்ன செய்ய முடியும் என்பதன் தொடர்பில் தன்னிடம் திட்டவட்டமான யோசனைகள் இருப்பதாக திரு டான் கூறினார்.

