வரும் வார இறுதியிலும் செப்டம்பர் மாதப் பள்ளி விடுமுறையிலும் நிலச் சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியாவுக்குச் செல்வோர் கூடுதல் பயண நேரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னர் ஜூன் பள்ளி விடுமுறையின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போன்ற நிலைமை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியது.
ஜூன் பள்ளி விடுமுறையின்போது போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்ததாகவும், விடுமுறை தொடக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி கிட்டத்தட்ட 250,000 பேர் இரு சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்றதாகவும் ஆணையம் தெரிவித்தது.
வாரயிறுதியான ஜூன் 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை 1.2 மில்லியன் பேர் நிலச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தினர்.
காரில் சென்றவர்கள் உச்சநேரங்களின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வரும் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதிபர் தேர்தல் வாக்களிப்பு நாள். அன்று பொது விடுமுறை. செப்டம்பர் மாதப் பள்ளி விடுமுறை வரும் சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதிவரை நீடிக்கும். செப்டம்பர் 11ஆம் தேதி ஆசிரியர் தினம்.
இந்த விடுமுறைக் காலத்தில் சோதனைச்சாவடிகளுக்குச் செல்லும்முன் வாகனமோட்டிகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன் மோட்டோரிங்’ இணையத்தளத்தில் அல்லது புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலும் பொருத்தப்பட்டுள்ள விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை அமைப்பில் போக்குவரத்து நிலைமையை அறிந்த பின்னர் பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.