அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான திரு தர்மன் சண்முகரத்னத்தின் புதல்வர் திரு அகிலன், ஜூலை மாதம் நிதி அமைச்சுக்குள் வேறு ஒரு இயக்ககத்திற்கு மாற்றப்பட்டார்.
கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பட்ட நிலையை முன்னதாகவே தவிர்த்துக்கொள்வதே இதற்கான காரணம் என்று நிதி அமைச்சும் பொதுச் சேவை ஆணையச் செயலகமும் தெரிவித்தன.
திரு அகிலன் 2022ஆம் ஆண்டில் நிதி அமைச்சில் சேர்ந்தார். அவர் முன்பு காப்புநிதி முதலீட்டு இயக்ககத்தில் பணியாற்றினார்.
அந்த இயக்குநரகத்தில் அவர் பணியாற்றியபோது கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பட்ட நிலை எதுவுமில்லை என்று அறிக்கை கூறியது.
திரு அகிலன் இப்போது நிதி அமைச்சில் சமூகச் செயல்திட்டங்கள், மனிதவளக் கொள்கைகள் இயக்ககத்தில் பணியாற்றுகிறார்.
அகிலனின் இப்போதைய வேலைக்கும் அதிபர் தேர்தலில் அவரின் தந்தை போட்டியிடுவதற்கும் இடையில் கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பட்ட நிலை இல்லை என்று அறிக்கை கூறியது.
சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைத் தொடர்ந்து புதன்கிழமை அந்த அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன.
திரு அகிலனுக்கு முழு நேர தேசியச் சேவையில் இருந்து காலவிடுப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்த சில சமூக ஊடகப் பதிவுகள், அதற்கான காரணம் என்ன என்றும் கேட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதற்குப் பதிலளித்த அந்த அமைப்புகள், இதர அனைத்து வெளிநாட்டுத் தகுதி கல்விமான்களைப் போலவே திரு அகிலனும் நடத்தப்பட்டார் என்று தெரிவித்தன.
திரு தர்மன் சண்முகரத்னம், 66, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கி இருக்கிறார்.

