அதிபர் தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. அதிபர் தேர்தல் பிரசார ஓய்வு நாளான வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) பிரசாரமோ தேர்தல் விளம்பரமோ கூடாது என்று தேர்தல் துறை புதன்கிழமை தெரிவித்தது.
ஓய்வு நாள் என்பது அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதைச் சிந்தித்து முடிவுசெய்ய வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படும் காலஅவகாசம் ஆகும் என்பதை தேர்தல் துறை நினைவூட்டி இருக்கிறது.
வாக்களிப்பு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குப் போகும்போது எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டும் வகையிலும் இதர வாக்காளர்களைக் கவரும் வகையிலும் படங்களையோ பொருள்களையோ வைத்திருக்கக்கூடாது.
சட்டை, துணி, பைகள், வில்லைகள் போன்றவை இவற்றில் அடங்கும்.
அப்படி யாராவது விதியை மீறிச் செயல்பட்டால் அவர்களை வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிடக்கூடும்.
அதிபர் தேர்தல் பிரசார ஓய்வு நாள் என்பது ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 8 மணி வரை நடப்பில் இருக்கும்.
பிரசார ஓய்வு நாளின்போது வாக்கு வேட்டையாடுவது, சுற்றுலா, வீட்டுக்கு வீடு பயணம், தேர்தல் தொடர்பான விளம்பர நோக்கத்திற்காக வழிபாட்டு இடங்களுக்குப் போவது, எந்த வகை பொதுக் கூட்டங்களையும் இணையத்திலோ, நேரடியாகவோ இரண்டையும் உள்ளடக்கியோ நடத்துவது ஆகிய அனைத்தும் இடம்பெறக்கூடாது.
தேர்தல் விளம்பரத்திற்கும் அனுமதி இருக்காது. பிரசாரம் போன்று கருதப்படக்கூடிய எந்த செயல்களையும் வேட்பாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள், வாக்களித்துவிட்டு வருவோரிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றை வாக்களிப்பு நாளில் வாக்களிப்பு முடிவதற்கு முன்பாக வெளியிடக்கூடாது என்பதை வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல் துறை நினைவூட்டி இருக்கிறது.