ஆடவர் ஒருவர் உயிரிழந்த ஆர்ச்சர்ட் சாலை சண்டையுடன் தொடர்புள்ள ஒருவர், ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை ஆறு மணியளவில் கான்கார்ட் ஹோட்டலிலும் கான்கார்ட் கடைத்தொகுதியிலும் மூன்று கத்திகள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முகமது சக்காரி டேனியல் முகமது அசார், அன்றைய தினம் அதிகாலை ஐந்து மணிக்குமுன், முகமது ஷாருல்நிசாம் ஒஸ்மான் என்பவரிடம் அதே போன்றதொரு கத்தியைக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருபத்திரண்டு வயது சக்காரி மீதான வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முப்பது வயது ஷாருல்நிசாம் ஆபத்தான ஆயுதத்துடன் ஒருவரைக் காயப்படுத்தியதாக முன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவர் 30 செண்டிமீட்டர் நீளமான கத்தியைப் பயன்படுத்தி விஷ்ணு சூரியமூர்த்தி என்பவரின் நெஞ்சில் குத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இருபத்தேழு வயது விஷ்ணு, திரு முகமது இஸ்ராட் முகமது இஸ்மாயில் என்பவரைக் காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்தவர். அவரும் கும்பலின் மற்ற உறுப்பினர்களும் ஆபத்தான ஆயுதத்துடன் சண்டையிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
காயம்பட்ட திரு இஸ்ராட் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்ததாக அஸ்வின் பச்சன் பிள்ளை சுகுமாறன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சண்டை தொடர்பில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

