இவ்வாண்டு டெலிகிராம் தகவல் செயலிவழி ஆள்மாறாட்ட மோசடிக்கு இலக்கான 50க்கும் மேற்பட்டோர் குறைந்தது $18,000 இழந்தனர்.
டெலிகிராம் பயன்படுத்துவோரைத் தந்திரமாக ஏமாற்றி, அவர்களது கைப்பேசி எண்ணையும் டெலிகிராம் தரும் உட்பதிவு குறியீட்டையும் மோசடிக்காரர்கள் பெறுவார்கள். அதன்பின்னர், அவர்களது டெலிகிராம் கணக்குகளை மோசடிக்காரர்கள் ஊடுருவுவார்கள் எனக் காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
ஒருவரின் கணக்கை ஊடுருவியபின், அந்தக் கணக்கைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரிந்தவர்களுடனும் மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வதாக அறிக்கை தெரிவித்தது.
டெலிகிராம்வழி மோசடி செய்வோர், வழக்கமாக நான்கு வழிகளில் மோசடி செய்கின்றனர்.
டெலிகிராம் பயன்படுத்துவோரை “ரகசிய டெலிகிராம் அரட்டையில்” மோசடிக்காரர்கள் சேர்ப்பார்கள். பிறகு, அவர்களது அரட்டையைப் படமெடுத்து அனுப்பச் சொல்வார்கள். அதே சமயத்தில், அவர்களின் உட்பதிவு குறியீட்டை இயக்குவார்கள். அது படத்தில் தெரிந்துவிடும்.
டெலிகிராம் பயன்படுத்துவோரிடம் குறிப்பிட்ட சில பயன்பாட்டுப் பெயர்களைத் தேடி, அதனைப் படமெடுத்து அனுப்பச் சொல்வார்கள். அந்தப் படத்தில் உட்பதிவு குறியீடு தோன்றுவதை மோசடிக்காரர்கள் உறுதி செய்வார்கள்.
“இலவச டெலிகிராம் உறுப்பியம்” என்ற பாசாங்கின்கீழ் ஓர் இணையத்தளத்தின் இணைப்பு டெலிகிராம்வழி அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பை அழுத்துவோர், தங்களது கணக்கின் பயன்பாட்டை இழந்துவிடுவார்கள்.
டெலிகிராம் தடை விதித்த ஒரு தொடர்பின் கணக்கை “சரிபார்க்க அல்லது தடையை நீக்க” உதவுமாறு டெலிகிராம் பயன்படுத்துவோரிடம் கேட்கப்படும். இதற்காக, அவர்கள் தங்களது கைப்பேசி எண்ணை வாடிக்கையாளர் சேவை கணினிபோல் பாசாங்கு செய்யும் இன்னொரு கணக்குடன் பகிரவேண்டும். அவ்வாறு செய்தவுடன், “சேவை கணினி” உட்பதிவு குறியீட்டைக் கேட்கும் அல்லது “உறுதிப்படுத்தும் விசையுள்ள” இணைப்பை அனுப்பி வைக்கும்.
உட்பதிவு குறியீட்டுடன் கணக்கின் பயன்பாடு கைக்குக் கிடைத்ததும், அந்தக் கணக்கின் தொடர்புகளிடம் கடன்கள் அல்லது பயனுள்ள தகவல்கள் கேட்கப்படும்.
டெலிகிராம் கணக்கு ஊடுருவப்பட்டால், அந்தத் தளத்தின் ஆதரவுச் சேவையிடம் புகாரளித்து, குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் தெரியப்படுத்தவேண்டும்.
டெலிகிராம் கணக்கைப் பாதுகாப்பது பற்றி மேல்விவரம் அறிய, https://www.csa.gov.sg/alerts-advisories/Advisories/2022/ad-2022-013 இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.