செப்டம்பர் மாதத்தின் முதல் பாதி மழையில்லாமல், காற்றோட்டமாகவும், பொதுவாகச் சற்று வெப்பமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் புதன்கிழமை தெரிவித்தது.
தென்கிழக்கு அல்லது தென் திசையிலிருந்து வீசும் காற்றால், சில இரவுகளில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்கலாம்.
ஒருசில நாட்களில், காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் தீவின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமத்ரா புயலால், ஓரிரு காலை நேரங்களில் பலத்த காற்றுடன் பரவலாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்புண்டு.
செப்டம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
ஆகஸ்ட் மாதம் பொதுவாகவே வெப்பமாக இருந்ததாகவும் ஆய்வு நிலையம் தெரிவித்தது. அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியசுக்குமேல் இருந்தது. அட்மிரல்டியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆக அதிகமாக 34.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஒருசில இரவு நேரங்களில், குறிப்பாகத் தெற்கிலும் கிழக்கிலும், குறைந்தபட்ச இரவுநேர வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்குமேல் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக மழை பெய்தது. ஜூரோங்கில் சராசரியைவிட 21 விழுக்காடு அதிகமாகவும், குவீன்ஸ்டவுனில் 61 விழுக்காடு குறைவாகவும் மழை பெய்தது.

