சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள சிங்கப்பூரர்கள் இன்று (செப்டம்பர் 1) காலை 8 மணி முதல் வாக்களித்தனர்.
காலை 8.14 மணியளவில், அதிபர் ஹலிமா யாக்கோப் தமது கணவர் திரு முகமது அப்துல்லா அல்ஹஃப்ஷியுடன், சுங் செங் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்கச் சென்றிருந்தார். இருவரும் வாக்களித்தபின் 8.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.
பிரதமர் லீ சியன் லூங், தமது துணைவியார் ஹோ சிங்குடன் கிரசெண்ட் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு, காலை 9.25 மணியளவில் வாக்களிக்கச் சென்றார். இருவரும் வாக்களித்த பின்னர் காலை 9.40 மணியளவில் திரும்பினர்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான திரு டான் கின் லியான், அவரின் துணைவியார் டே சியூ ஹோங் இருவரும் இயோ சூ காங்கில் உள்ள ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தனர்.
காலை 9.15 மணியளவில் வாக்களிக்கச் சென்ற அவர்களுடன் அவர்களின் மகனும் மகளும் சென்றிருந்தனர்.
வாக்காளர்களை நோக்கிக் கையசைத்த திரு டான், தாம் பெருமையாக உணர்வதாகவும் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு டான், வாக்களிப்பு நடைமுறை மிக எளிதாக இருந்ததாகவும் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். காலை 10 மணியளவில் அவர் அங்கிருந்து திரும்பினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் மற்றொருவரான திரு இங் கொக் சொங், காலை 10 மணியளவில், தமது வருங்காலத் துணைவியாருடனும் சகோதரருடனும் கேலாங் சிராயில் அமைந்திருக்கும் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று மிக உற்சாகமாக உணர்கிறேன். அனைவரும் வந்திருப்பதற்கு நன்றி,” என்று கூறினார்.
வெவ்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர் திரு தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் ஜேன் இட்டோகியும் ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மன், காலையில் தெம்பனிஸ், மார்சிலிங் போன்ற சில வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று மக்கள் வாக்களித்ததைத் தாம் பார்வையிட்டதாகவும் வாக்களிப்பு முறை மிகவும் சுமூகமாக நடந்ததாகவும் கூறினார்.
“பிற்பகலில் எங்களை வாக்களிக்க செல்லுமாறு தேர்தல்துறை கூறிய ஆலோசனையைக் கேட்டோம். காலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பிற்பகலில் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் துறை மக்களுக்குக் கூறிய அறிவுரை அற்புதமான ஏற்பாடு,” என்றும் திரு தர்மன் தெரிவித்தார்.

