இரண்டு மாத கால முழுமையான புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு தேக்கா நிலையத்தின் இரண்டாவது தளம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தரைக்கற்கள் மாற்றப்பட்டு, புதிய சாயம் பூசப்பட்டு, விளக்குகள், மின்விசிறிகள், மேற்கூரை போன்றவை மாற்றப்பட்டு தீபாவளி விற்பனைக்குத் தயாராக உள்ளது கடைத்தொகுதி.
அத்தளத்தில் இருக்கும் கழிவறையும் சீரமைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
வட்டார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஜூலை 3ஆம் தேதி தேக்கா நிலையம் மூடப்பட்டது. உணவுக் கடைகளையும் ஈரச் சந்தைக் கடைகளையும் கொண்ட முதல் தளம் செப்டம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும்.
துணிக்கடைகள், தையல்கடைகள், அலங்காரப் பொருள்கள், செருப்பு, சில்லறைபொருள்கள் விற்கும் கடைகள், கடிகார பழுதுபார்ப்புக் கடைகள் என பல கடைகளைக் கொண்ட இரண்டாவது தளம், தீபாவளிக்கு முன்னதாக திறக்கப்பட்டதில் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் நிம்மதி தெரிவித்தனர்.
புதுப்பிக்கப்பட்ட கட்டடம் அழகாகவும் வண்ணமயமாகவும் காணப்படுவதாகக் கூறிய ‘மோனிஷ் கிரியேஷன்ஸ்’ கடையின் விற்பனையாளர் சுக்ஜித் கோர், தீபாவளி விற்பனைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
ஆனால் கட்டடப் புதுப்பிப்பு தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்ற ‘சுபஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ்’ கடை உரிமையாளர் வசந்தா சுதர்ஷனன், 56, பளிச்சென்ற சாயத்தை எதிர்பார்த்ததாகக் கூறினார்.
“இரண்டு மாத காலம் கடையை மூடி, ஊழியர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்காக செய்யப்பட்ட செலவு நியாயமானதாக இல்லை,” என்றார் அவர்.
திருவாட்டி வசந்தாவைப்போல இரண்டு மாதம் கடை மூடியிருந்தபோது ஊழியர்களுக்குச் செலவு செய்து சிரமப்பட்டதாகக் கூறிய ‘வீமிஸ்டிக்’ கடை தையல்காரர் ரெங்கராஜு நாயுடு சேகர், 58, பல மடங்கு உழைத்து வருவாய் இழப்புக்கு ஈடுகட்ட வேண்டியுள்ளதாகக் கூறினார்.
வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக வாடிக்கையாளர்களின் வருகை அமையும் என எதிர்பார்த்தாலும் தேக்கா நிலையத்தின் முதல் தளம் இன்னும் திறந்தபின்னரே அதிகளவு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றார் ‘சுகந்தி ஜுவல்லரிஸ்’ கடையின் உரிமையாளர் கே குணசேகரன், 60.
கடைகள் திறக்கப்பட்டது இன்னமும் பலருக்குத் தெரியாததால் வாடிக்கையாளர்களைத் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்து வருவதாக சொன்னார் ‘எமோர்டெக்ஸ் லேடீஸ்’ தையல் கடையில் மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றும் தையல்காரர் பன்னீர்செல்வம்.
துணி வாங்க தேக்கா சந்தைக்கு அடிக்கடி செல்லும் பகுதி நேர சமையல் கலைஞரான 61 வயது பி.பார்வதிக்கு கடைகள் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
பாலர் பள்ளி ஆசிரியர் வாசுகி வேலுசாமி, 62, தீபாவளிக்கு பொருள் வாங்க வசதியாக கடைகள் திறக்கப்பட்டதில் நிம்மதி அடைந்ததாகக் கூறினார்.
“இங்கு புதிய வடிவமைப்பில் ஆடைகள் கிடைக்கும். விலையும் மலிவாக இருக்கும்” என்றார் அவர்.
“பலதரப்பட்ட கடைகள் இருக்கும் ஒரே தளம் மீண்டும் திறக்கப்பட்டது என்னைப் போன்ற பலருக்கும் வசதியாக இருக்கும்,” என்றார் 70 வயது திருவாட்டி ராமாமிர்தம். முக்கியமாக, தையல் கடைகள் திறக்கப்பட்டதில் இவருக்கு மகிழ்ச்சி. பலரும் ரவிக்கை போன்ற இந்திய உடைகளைத் தைப்பதற்கும் சரிசெய்வதற்கும் தேக்கா நிலையத்தை நாடுகின்றனர் என்றார் அவர்.