சிங்கப்பூரில் நீண்ட வாரயிறுதி விடுமுறை வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று தரை வழியாக மலேசியாவுக்குள் பலரும் வாகனங்களில் சென்றனர்.
அதனால் இரண்டு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து தேக்கம் ஏற்பட்டது. பயணங்கள் தாமதம் அடைந்தன.
துவாஸ் இரண்டாவது பாலத்தில் காலையிலேயே போக்குவரத்துத் தேக்கம் தொடங்கிவிட்டதாக சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் முற்பகல் 11.15 மணிக்கு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. இரு சோதனைச்சாவடிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக அந்த ஆணையம் பிற்பகல் 1 மணிக்குத் தெரிவித்தது. அது பிற்பகல் 2.23 மணிக்கு மற்றோர் அறிவிப்பை விடுத்தது.
மலேசியாவின் சோதனைச்சாவடியில் இருந்து துவாஸ் சோதனைச்சாவடி வரை வாகனங்கள் தேங்கி நிற்பதாக அது கூறியது. இரண்டாவது பாலத்தில் மலேசியாவின் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் இன்னமும் தேங்கி நிற்பதாக இரவு 7.03 மணிக்கு ஆணையம் மேலும் தெரிவித்தது. இவ்வேளையில், ஜோகூர் கடற்பாலத்தில் காலை முதலே சிலேத்தார் விரைவுச்சாலை வரை வாகனங்கள் தேங்கி நின்றன. இந்த நிலை நாள் முழுவதும் நீடித்தது. வார இறுதியில் நீண்ட விடுமுறையில் மக்கள் மலேசியாவுக்குள் செல்லும்போது இரண்டு தரை சோதனைச்சாவடிகளிலும் எப்போதுமே போக்குவரத்துத் தேக்கம் ஏற்படுவதுண்டு.
சிங்கப்பூரர்கள் வெள்ளிக்கிழமை அதிபர் தேர்தலில் வாக்களித்தார்கள். செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக இருந்தது. செப்டம்பர் 10 வரை பள்ளி விடுமுறை நாள்கள். செப்டம்பர் 11ஆம் தேதி ஆசிரியர் தினம். ஒரு மாத கால ஜூன் பள்ளி விடுமுறையின் முதல் வாரத்தில் இரண்டு சோதனைச்சாவடிகள் வழியாகவும் கிட்டத்தட்ட 250,000 பேர் கடந்துசென்றனர்.
ஜூன் 16 முதல் 18 வரையிலான வாரயிறுதி நாள்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் தரைவழி சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தினார்கள். மொத்தம் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் தரை வழியாகச் சென்று வந்தனர் என்று ஆணையம் தெரிவித்தது.