தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற உறுப்பினர்களாக இரு மூத்த பாட்டாளிக் கட்சியின் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளையும் கடமைகளையும் ஆற்ற, அனுமதி மறுக்க எந்த காரணமும் இல்லை என்று அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் 2020ஆம் ஆண்டு முதல் அதன் கொள்முதல், பணம் செலுத்தும் செயல்முறைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. அதே நேரத்தில் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் ஒப்பந்தப்புள்ளிகள், குத்தகைகளைக் கையாளும் இரு நகர மன்றத்தின் இரு குழுக்களில் உள்ளார் என்று தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு அந்நகரமன்றம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதம் வெளிவந்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நகர மன்றம் உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், திருவாட்டி சில்வியா லிம், திரு பிரித்தம் சிங்கின் குறிப்பிட்ட அதிகாரங்கள், நகர மன்றத்தின் பணப் பட்டுவாடா, கொள்முதல் செயல்முறைகள் குறித்தும் தேசிய வளர்ச்சி அமைச்சின் ஆகஸ்ட் 22ஆம் தேதி கடிதத்துக்கு அல்ஜுனிட்-ஹவ்காங் பதிலளித்துள்ளது.
பதிலளிக்க நகர மன்றத்துக்கு அமைச்சு இரு வார கால அவகாசம் அளித்தது.
நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்றத்துக்கு பொறுப்பேற்கும் எந்தக் கடமையும் இல்லை என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிதி விவகார முடிவுகள் மீதான திருவாட்டி லிம், முன்னாள் பாட்டாளிக் கட்சித் தலைவர் லோ தியோ கியாங் ஆகியோரில் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் உத்தரவையும் அமைச்சகம் ரத்து செய்தது.
ஆனால், நகர மன்றத்தின் பதிலைப் பொறுத்து, பொதுப் பணத்தைப் பாதுகாப்பதற்கான மேற்கொண்டு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கலாம் என்று அமைச்சு கூறியது.
நகர மன்றத்தில் அனைத்து குழுக்களிலும் உள்ள உறுப்பினர்கள் கூட்டாக முடிவுகளை எடுப்பதாக நகர மன்றத் தலைவர் டென்னிஸ் டான், அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உள்ளது. வாக்குகள் சரிசமமாக இருந்தால், குழுவின் தலைவர் தமது வாக்கை அளிப்பார். எனவே, எவரும் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் அல்லது ஒப்புதல்களை வழங்கும் ஆபத்து இல்லை என்றார் அவர்.
திரு பிரித்தம் சிங் உறுப்பினராக உள்ள ஒப்பந்தப்புள்ளிகள், குத்தகைக் குழு நியமிக்கப்பட்ட வெளிப்புற ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒப்புதல் செயல்பாட்டில் விலை தர முறை மதிப்பீட்டு கட்டமைப்பை நம்பியுள்ளது திரு டான் மேலும் கூறினார்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், ஒப்பந்தப் புள்ளி மதிப்பீட்டில் தங்களுக்கு எந்தவகையிலாவது தொடர்பு உள்ளதா என்பதை அறிவிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், அதிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். இது கூட்ட அறிக்கையில் ஆவணப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
திருவாட்டி லிம், திரு சிங் இருவரும் குடியிருப்பு மற்றும் சமூக தொடர்புக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இது குடியிருப்பு வட்டாரத்தின் திட்டங்கள் தொடர்பான ஒப்புதலுக்கான கோரிக்கைகள், வரவுசெலவுத் திட்டத்துக்குள் பராமரிப்புக் கொள்முதல் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது என்று மன்றம் தெரிவித்துள்ளது.
திருவாட்டி லிம், மன்றத்தின் தணிக்கைக் குழுவிலும் உள்ளார். இது சட்டபூர்வ தணிக்கை விவரங்கள், அதன் நிர்வாக கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறது.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற பணப்பட்டுவாடா நடைமுறையில் பாட்டாளிக் கட்சியின் தலைவி சில்வியா லிம், கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் இருவரும் அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை மாதம் தெரிவித்து இருக்கிறது. அதேவேளையில், பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேற்கொண்டு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க திட்டம் இல்லை என்றும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் குறிப்பிட்டுள்ளது.
திருவாட்டி லிம், திரு சிங் தங்களது அதிகாரங்கள், கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பில் தேசிய வளர்ச்சி அமைச்சு எந்த ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று நகரமன்றம் நம்புவதாக திரு டான் தெரிவித்தார்.